- துவாரகன் அது புதிய வண்ணத்துப்பூச்சி அதன் வரவு மகிழ்ச்சியானது தேன் குடிப்பதற்குப் பதிலாக எங்களோடு சேர்ந்து கஞ்சி குடிக்கவும் கூழ் குடிக்கவும் பண்டிகைகளில் பலகாரம் சாப்பிடவும் கூடுமென ஆரூடம் கணித்தனர். மிக அரிதான செவ்வாச்சிவகை என்றும் கூறினர். அதன் வருகை கண்டு அம்மம்மா மிக மகிழ்ந்தார். சாமியறையில் நேரமெடுத்து வேண்டுதல்கள் செய்தார். அப்போதுதான் பார்த்தேன். புதிய வண்ணத்துப்பூச்சியும் மற்றையதைப் போலவே எங்கள் வீட்டுச் செவ்வரத்தையில் தேன்குடித்துக் கொண்டிருந்தது. நான் வைத்த கஞ்சியோ பாயாசமோ பிடிக்கவில்லைப்போலும். அது பறக்கும்போது தன் இறகுகளை அடித்துக்கொண்டுதான் பறந்தது. ஓ! இதுவும் வண்ணத்துப்பூச்சிதான். 05/2026 நன்றி : பதிவுகள்
- துவாரகன் முகத்தில் ஓங்கியறைந்த வார்த்தை நீண்ட நேரமாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது உவப்பில்லாத அந்த வார்த்தையை மறைப்பதற்காக நேரம் கடத்தும் வித்தையை உடலும் தெரிந்து வைத்திருந்தது யன்னல் மறைப்புக்குக் கட்டிய துணியை அவிழ்த்து மீளவும் கட்டுகிறான் உள்ளேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையை வெளியே வைக்கிறான் மற்றையது உள்ளே மாறுகிறது வெறுமையான தேநீர்க்குடுவை தூக்கிப் பார்த்து நகர்த்துகிறான் தலைவாசல் முன்னிருந்த கால்விரிப்பு தூசு தட்டப்படாமலே நகர்த்தப்படுகிறது யாரோ வாசலில் நீண்ட நேரமாக அழைத்திருக்கிறார்கள் சின்னவன் வந்து கைகளால் தட்டித் திசைகாட்டுகிறான் எவ்வளவுதான் மறந்தாலும் மறைத்தாலும் அது விடுவதாயில்லை. நன்றி : பதிவுகள்