ஜனவரி 24, 2022

விழி பிதுங்கும் மாடுகள்

 - துவாரகன் 


அந்த நாற்றத்தை

நாங்கள்

மூன்று தலைமுறையாக

அனுபவிக்கிறோம்

என்றார் பெரியவர்.

 

நல்ல மாட்டுக்கு

ஒரு சூடு போதும்.

இந்த மாடுகளை

என்னதான் செய்வது?

 

கால்களைப் பிணைத்து

லாடம் அடித்து

நாணயக் கயிற்றை

இறுக்கிக் கட்டி

எரு ஏற்றிப்

பாரம் இழுக்க வைத்தால்

எல்லாம் சரிவரும்.

 

இல்லாவிடில்

குறி சுருங்கும்வரை

சூடுவைக்க வேண்டியதுதான்!

21012022

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்

 - துவாரகன்


இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்?

பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய்.

இனிப்புப் பலகாரங்களையும்

சில புதிய ஆடைகளையும்

வாங்கி வைத்திருப்பாய்.

பவுடர் அப்பிய முகத்துடன்

புன்னகை பூத்தபடி,

படியேறும்போது

எந்த வார்த்தையை

முதலில் பேசவேண்டுமென்று

மனப்பாடம் செய்து கொண்டிருப்பாய்.

ஆனால்,

உன்னைப் பார்த்து

நான் பரிதாபப்படுகிறேன்.

உனக்காக.

ஐந்து பகல்களும்

இரண்டு இரவுகளும்

அன்னியனின் ஆயிரத்தெட்டு வண்ணங்களையும்

புலுனிகளின் கீச்சிடலுக்கும்

நாய்களின் குரைப்புகளுக்குமிடையே

நெருப்பில் சுட்ட

கருவாட்டு வாசனை நினைப்பில்

இதயம் கருக

ஏற்றுக்கொண்டாளே!

அது

நீ தேடிக்கொடுத்த

சுயநல இருள்.

உயர்ந்த நீர்த்தாங்கியில்

தொங்கிக் கொண்டிருக்கும் குளவிக்கூடுபோல்,

எல்லோர் கண்களிலும் துலங்குகிறது

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்.

நீ தேடிக் கொடுத்த பரிசுகள் அவை.

அவளின் கட்டை தீயில் வேகும்வரை

ஆறாதது!

14012022

http://www.easy24news.com

அகலிகையின் செருப்பு

- துவாரகன்



மற்றவர் பொருளைத் திருட 

என் தந்தை 

எனக்குக் கற்றுத் தரவில்லை. 

நானும் என் மகனுக்குக் 

கற்றுக் கொடுக்கப் போவதில்லை. 


நிரம்பக் கற்றவர்களும் 

மற்றவர் பொருளைத் 

திருடக் கற்றிருக்கிறார்கள். 

செருப்பைக்கூட...

களவாக அணிந்து பார்க்க 

ஆசைப்படுகிறார்கள். 


இந்திரன் சேவலாகியதும் 

திருட்டுக்காகத்தான். 

பூனையாகிப் பொட்டுக்குள்ளால் 

தப்பியோடியதும் 

திருடியதால்த்தான். 


ஏன், அகலிகைக்கு மட்டும் 

தான் அணிந்திருந்தது 

தன் செருப்பில்லையென்று 

தெரியாமலா போனது? 


திருடியவரும் 

திருடக் கொடுத்தவரும் 

பிரதியுபகாரமாக 

ஒன்றை இன்னொன்றால் 

நிரப்பிக் கொள்கிறார்கள்போலும்!

12012022

https://vanakkamlondon.com/literature/kavithaikal/2022/01/147143/?fbclid=IwAR0FF6xmZvNt6IKx9WG01J7j2dfVtejxq_plCxWbz96egGQWVIghYsikb_M

ஜனவரி 06, 2022

புதிய மூன்று சிலுவைகள்

 

-துவாரகன்

 

பொய்யருக்கும்

காமுகருக்கும்

சட்டவிரோதிகளுக்கும்

இந்த அழகிய வெளி

திறக்கப்பட்டிருக்கிறது.

 

மூலையில் பதுங்கியிருக்கும்

உண்மையை

சவுக்கால் அடியுங்கள்.

ஒழுக்கத்திற்கு

முட்கிரீடம் சூட்டுங்கள்.

நேர்மைக்கு

நஞ்சுகொடுத்துச் சாவடியுங்கள்.

 

மீளவும் உயிர்க்காதபடி

மூன்று சிலுவைகளிலும்

முந்நூறு ஆணிகொண்டு

அறையுங்கள்.

 

நாங்கள் எல்லோரும்

பொய்யரைப் போற்றுவோம்.

நாங்கள் எல்லோரும்

காமுகரைக் கொண்டாடுவோம்.

நாங்கள் எல்லோரும்

சட்டவிரோதிகளுக்குப்

பன்னீர் தெளிப்போம்.

04012022

https://vanakkamlondon.com