பிப்ரவரி 24, 2022

ஆத்மவிசாரியின் பாவச்சுமை

 


- துவாரகன்

 

உன் முதுகை அழுத்தும் அத்தனையும்

பாவமூட்டைகளா?


முற்றிய நெற்கதிர்

தலைசாய்த்தபோதெல்லாம்

காட்டாறாய் வந்தாயே!

கையறுநிலைக் கண்ணீர்ப்படலத்தைப்

பரிசளித்தாயே!

அந்தப் பாவத்தைக் கழுவுதற்கா

திசையெட்டும் நீர்ப்படியேறினாய்?

 

மழை பெய்து ஓய்ந்துபோன

விடிகாலை வேளையிலே,

காக்கைகூடக் கரையாமல்

தனியனாய்

அங்கப் பிரதிஷ்டை செய்தாயே!

உன் பாவங்கள் கரைந்தனவா அன்பரே?

 

விச ஈட்டி  பாயும்முன்னே

உன் அரற்றல் கேட்டு

உள்ளே அழைக்கக்கூடும்

என்று நினைந்தழுகிறாய்.

 

உன் முதுகை அழுத்திக் கொண்டிருப்பது

திட்டிவாயிற் காவலனுக்குரிய

பரிசுப் பொதியல்ல

பாவச்சுமை!

26012022