ஜனவரி 04, 2013

கொம்பு முளைத்த மனிதர்கள்


- துவாரகன் 

புதிய நட்சத்திரங்கள்
வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல்
வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு
கொம்பு முளைக்கத் தொடங்கியது.

கோயிற் கச்சான் கடையில்
விற்பனைக்கு வைத்த
மிருகங்களின் வால்களையும் காதுகளையும்
விருப்பமானவர்கள் அணிந்து கொண்டார்கள்.

மாடுகள் போலவும்
நரிகள்போலவும்
நாய்கள் போலவும்
குரங்குகள் போலவும்
ஓசையிடக் கற்றுக்கொண்டார்கள்.

தாவரங்களையும் கிழங்குகளையும்
தின்னத் தொடங்கினார்கள்.
ஆற்றில் நீர் குடிக்கவும்
சுவடறிந்து இடம்பெயரவும்
இரைமீட்கவும்
பழகிக் கொண்டார்கள்.

வீடுகள் எல்லாம் வெறிச்சோடின.
காடுகள் எல்லாம்
புதிய மிருகங்களால் நிரம்பி வழிந்தன.

உண்மை மிருகங்களின்
கொம்புகளும் காதுகளும்
உதிர்ந்து கொண்டிருக்க,
மீண்டும்
வால்கா நதிக்கரையில் இருந்து
கூன் நிமிர்த்தியபடி நடந்து வருகிறார்கள்
புதிய மனிதர்கள்.
01/2013