மே 28, 2013

முதுமரத் தாய்


- துவாரகன்

அடங்க மறுத்து
ஆர்ப்பரிக்கும் அலைகளாக
தீர்ந்து போகாத நினைவுகள்

வாழ்வின் இறுதி மணித்துளிகள்
அந்த விழிகளுக்குள்
இறுகிப்போயின.
சிறகடிக்கும் ஆசைகள்
மண்ணோடு மண்ணாய்
இற்றுப்போயின.

தளர்ந்து செதிலாகிப் போன
கால்களை நீட்டியபடி
இன்னமும் தீர்ந்து போகாத
அந்த நினைவுகளோடு
காத்திருக்கிறாள்
முதுமரத் தாயொருத்தி.

அறுந்துபோன செருப்பைத்
தூக்கியெறிந்து விட்டு செல்வதுபோல்
எல்லோரும்
அவளைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
2013/05

மே 17, 2013

ஒரு வார்த்தை





மூச்சுமுட்டி நெஞ்சடைக்கும் துயரோடு
வாய்விட்டு அழுபவரை
ஏனழுகிறாய் என்று கேட்பதற்கு
இந்த உலகில் ஒரு மனிதராவது வேண்டும்.


இன்னமும் ஆயிரம் ஆயிரம்
தளைகளோடும் தழும்புகளோடு
வாழ்வதற்கு சபிக்கப்பட்டோமா?