அக்டோபர் 30, 2011

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது




-துவாரகன்

உயிரைக் கொண்டோடிய கணத்தில்
தாயைப் பறிகொடுத்தாள்.
சோதரி கைபிடித்து
மீண்டு வந்தாள்.

வாரப்படாத தலை
கறைபடிந்த பற்கள்
உயிர்ப்பற்ற சிரிப்பு
குமரியானாலும் குறுகி நடந்தாள்
தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள்

சில அப்பாக்களைப் போலவே
ஒருநாள் புதுத்துணைவியோடு
பெற்றவன் வந்தான்.
வாடிய பூக்களிடையே
மீண்டும் அவள்
காணாமற்போயிருந்தாள்.

அவளுக்கென்று எதுவுமில்லாதபோது
ஒருநாள்
அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள்.

அவளுக்கொரு
புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது.
10/2011

(குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)


அக்டோபர் 17, 2011

ஒளி


- துவாரகன்

ஒளி
ஞாயிற்றின் தூய சுடர்
இருள் விரட்டி அறிவேற்றும் குறி

விளக்கேந்திய பெருமாட்டியும்
இருள்விரட்டி உயிர்த்திரி தூண்டினாள்.
அப்போதும்கூட
விளக்குகள் விளக்குகளாகவே ஒளிர்ந்தன.

கடவுளின் தூண்டாமணி விளக்கு
களவுபோனதிலிருந்து
விளக்குகளுக்கு
இருள் பற்றிய பயம்
தொடங்கிவிட்டது.

விளக்கைச் சுற்றிய ஈசல்கள்
மழையில் செட்டைகழற்றிச்
செத்துக்கிடந்த நேரம் பார்த்து
கொல்லைப்புறத்தால் கடவுள் வந்தார்.
கையில் அணைந்துபோன விளக்கு.
ஒரு மின்மினிப் பூச்சியை
அடையாளமாகப் பற்றிப் பிடித்திருந்தார்.
10/2011