முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவளுக்கொரு புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது




-துவாரகன்

உயிரைக் கொண்டோடிய கணத்தில்
தாயைப் பறிகொடுத்தாள்.
சோதரி கைபிடித்து
மீண்டு வந்தாள்.

வாரப்படாத தலை
கறைபடிந்த பற்கள்
உயிர்ப்பற்ற சிரிப்பு
குமரியானாலும் குறுகி நடந்தாள்
தனிக்குடிலில் ஒதுங்கியிருந்தாள்

சில அப்பாக்களைப் போலவே
ஒருநாள் புதுத்துணைவியோடு
பெற்றவன் வந்தான்.
வாடிய பூக்களிடையே
மீண்டும் அவள்
காணாமற்போயிருந்தாள்.

அவளுக்கென்று எதுவுமில்லாதபோது
ஒருநாள்
அதிசயமாகச் சிரித்துக் கொண்டு வந்தாள்.

அவளுக்கொரு
புதுச்சைக்கிள் கிடைத்திருக்கிறது.
10/2011

(குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)


கருத்துகள்

  1. நன்றே உள்ளது.அவளுக்கு ஒரு புது சயிக்கிள் எப்படி கிடைத்தது?வாழ்க்கையோடு அமைந்துவிட்டதா?சயிக்கிளை மறைபொருளாக கூறுகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  2. (குறிப்பு – நல்லவர்கள் புண்ணியத்தில் பள்ளிப்பிள்ளைகள் சிலருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன)

    பதிலளிநீக்கு
  3. போர் அழித்துவிட்டுச் சென்ற வாழ்வின் உயிர்ப்பை உயர்திணைகள் முடியாத போது அஃறிணை பொருட்களாலும் ஏற்படுத்தமுடியும் போலும்...இழைந்துவரும் சந்தம் ஒன்றும் அது சுமந்துவரும் துயரின் கசிவும் சடாரென்று மனதை அறைகிறது..அருமையான கவிதை..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அவளுக்கென்று எதுவுமில்லாதபோது...
    என்கிற வரி வலிக்கிறது.
    அவள் இழந்துபோன
    சிரிப்பின் உயிரை...
    யாரால் திருப்பிக் கொடுத்துவிட முடியும்?
    காயங்களை ”நன்று” என
    சொல்லிவிட முடியவில்லை.
    மனசை கனக்க வைக்கிற கவிதை.


    தீபிகா.
    http://theepikatamil.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. "அவளுக்கென்று எதுவுமில்லாதபோது..." அது கவிதையில் ஒரு வரிதான். ஆனால் அவளின் வாழ்க்கையில் அது பெரிய கதைக்குரிய வரி.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீபிகா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012