செப்டம்பர் 15, 2010

யாருக்குத் தெரியும்?



-துவாரகன்

இவ்வளவும் நடந்த பிறகும்
எனது வீடு இருந்த வீதி இருக்கிறது
அப்பு துலாக்கோலுக்குப் போட்ட
பெரிய கல்லு இருக்கிறது
ஆனால் அவளின் உதிரப்பூ மட்டும் இல்லை.

யாருக்கும் தெரியாத ஆற்றில் மிதந்து கிடந்தாயோ
உலகத்துக் கடலில் மூழ்கித்தான் போனாயோ
கடக்கும் போது பனைவெளிகளில் செத்துப்போனாயோ
நாய்கள் இழுத்து இழுத்துச்
சிதைத்துப்போட்ட சடலமாய் ஆனாயோ
சுட்டுத்தள்ளியவன் உருத்தெரியாமல் எரித்துவிட்டுப் போனானோ
யாருக்குத் தெரியும்?

இன்று எல்லோரும் உன்னை மறந்து விட்டார்கள்
தன் மடியில் வைத்துப் பாலூட்டியவள்
விறைத்துப்போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்

அதிஷ்டவசமாக
நீ, அவள் முன்னால் வந்து
சிரித்துக் கொண்டிருக்கும்
அந்தக் கணங்களுக்காக
இன்னமும் உயிரோடிருக்கிறாள்.
020920102013
நன்றி - காற்றுவெளி