முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாருக்குத் தெரியும்?



-துவாரகன்

இவ்வளவும் நடந்த பிறகும்
எனது வீடு இருந்த வீதி இருக்கிறது
அப்பு துலாக்கோலுக்குப் போட்ட
பெரிய கல்லு இருக்கிறது
ஆனால் அவளின் உதிரப்பூ மட்டும் இல்லை.

யாருக்கும் தெரியாத ஆற்றில் மிதந்து கிடந்தாயோ
உலகத்துக் கடலில் மூழ்கித்தான் போனாயோ
கடக்கும் போது பனைவெளிகளில் செத்துப்போனாயோ
நாய்கள் இழுத்து இழுத்துச்
சிதைத்துப்போட்ட சடலமாய் ஆனாயோ
சுட்டுத்தள்ளியவன் உருத்தெரியாமல் எரித்துவிட்டுப் போனானோ
யாருக்குத் தெரியும்?

இன்று எல்லோரும் உன்னை மறந்து விட்டார்கள்
தன் மடியில் வைத்துப் பாலூட்டியவள்
விறைத்துப்போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்

அதிஷ்டவசமாக
நீ, அவள் முன்னால் வந்து
சிரித்துக் கொண்டிருக்கும்
அந்தக் கணங்களுக்காக
இன்னமும் உயிரோடிருக்கிறாள்.
020920102013
நன்றி - காற்றுவெளி

கருத்துகள்

  1. மூச்சுக்கள் தொலைந்துபோன
    அந்தக்கணங்கள்பற்றி யாருக்குத்தெரியும்?
    //அதிஷ்டவசமாக
    நீ, அவள் முன்னால் வந்து
    சிரித்துக் கொண்டிருக்கும்
    அந்தக் கணங்களுக்காக...//

    பதிலளிநீக்கு
  2. //அதிஷ்டவசமாக
    நீ, அவள் முன்னால் வந்து
    சிரித்துக் கொண்டிருக்கும்
    அந்தக் கணங்களுக்காக
    இன்னமும் உயிரோடிருக்கிறாள்.//

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. "...யாருக்கும் தெரியாத ஆற்றில் மிதந்து கிடந்தாயோ
    உலகத்துக் கடலில் மூழ்கித்தான் போனாயோ
    கடக்கும் போது பனைவெளிகளில் செத்துப்போனாயோ
    நாய்கள் இழுத்து இழுத்துச்
    சிதைத்துப்போட்ட சடலமாய் ஆனாயோ.."

    கண்ணில் வழியும் நீரை
    கரவாய் வழித்து விட்டு
    ஒன்றும் அறியாப் பேதையென
    முழிக்கத்தான் முடிகிறது

    பதிலளிநீக்கு
  4. ஈழத்தில் பிள்ளைகளை இழந்துவிட்டு தவிக்கின்ற தாயரின் துன்பம் மிகுந்த வரிகளுக்கு கருத்துக் கூறிய, மதுரை சரவணன்> டொக்டர் எம்.கே. முருகானந்தன்> உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. கவிதையின் "விறைத்துப் போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்" , "இன்னமும் உயிரோடு இருக்கிறாள்" ஆகிய வரிகள் கூறியது கூறல் போல் எனக்குப் படுகிறது.
    "விறைத்துப் போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்
    அதிஸ்டவசமாக - நீ
    அவள் முன்னால் வந்து
    சிரித்துக் கொண்டிருக்கும்...
    அந்தக் கணங்களுக்காக"
    என்ற வரியுடனேயே கவிதை பூரணத்துவம் பெறுவதனால் கடைசி வரியை நீக்குவது கவிதையின் இறுக்கத்தை மேலும் வலுவடையச் செய்யும்.
    See more

    பதிலளிநீக்கு
  6. நினைக்கமுடியாத இழப்புக்குப் பின்னால் அவள் கற்சிலையாய் இருப்பது ஒரு விடயம் என்றால் அதிஷ்டவசமாக தன் பிள்ளை தனக்குத் திருப்பிக் கிடைக்கக் கூடும் என்பதற்காக உயிரோடிருக்கிறாள் என்றும் எடுக்கலாம். இதில் என்னைப் பொறுத்த வரையில் கூறியது கூறல் இல்லை. சாபம் பெற்று சிலையான அகலியையைப்போல. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...