ஜூலை 07, 2014

கனகியின் கொண்டைக்கு பூச்சூடும் சுப்பையன்


- துவாரகன்



அடி அழகி, இவ்வளவு காலமும்
குளத்துத் தெருவோரம்
வெறும் திரளைக் கற்களை
பொறுக்கிகொண்டிருந்தேனே!
என் காலங்களைக் கரைத்து விட்டேனடி!

செல்லத்துரையரும் ...காத்தானும்...
குடுமி வைச்ச சின்னச்சாமி ஐயரும்...
பெரியவளவு முதலியாரும்...
உன் வீடு வந்து போகும்போதெல்லாம்
பொறாமை கொண்டேனடி.
என் காலங்கள் வீணானதடி.

உலகத்தீரே, என்னைப் பொறுத்தருள்வீர்.
நான் கிறுக்கியதைப் பொத்திக்காத்து
பொக்கிசமாய் பொத்திவைத்தேன்.
அந்த ஏடுகளைச் சிதைத்தவரே.
மிச்சமிருப்பனவும் தருவேன்
தீயிட்டுப் பொசுக்குவீர்.

கனகி, அவள் அழகி.
அவள் கொண்டை ஆயிரம் பொன்பெறும்.
அவள் நகக்கண்களில் அழுக்கெடுக்க
என்னையும் சேர்த்திடுவீர்.
அவள் பேச்சின் நளினமும்
அவளின் அசைவின் அர்த்தமும்
இத்தனை நாள் தெரியாதிருந்தேனே!

அன்பரே வாரீர்!
கனகியின் பெருமை கேளீர்!!

அவள் கூந்தலில் கொண்டை பாரீர்!
அவள் கைகளில் விரல்கள் பாரீர்!
அவள் கால்களில் கொலுசு பாரீர்!
அவள் முகத்திலே கண்கள் பாரீர்!
---
(குறிப்பு – ஈழத்தில் 19 ஆம் நூற்றாண்டில் தோற்றம்பெற்ற அங்கதநூலே ‘கனகிபுராணம்’. இதனை எழுதியவர் நட்டுவச் சுப்பையனார்)