
- துவாரகன்
நெஞ்சடைத்து வரும் ஆற்றாமை
வாய் திறந்து அழுதால் தீருமோ?
கல்லோடு கட்டிக்
கடலில் போட்ட கதையாக
அச்சமும் அவலமும்
எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தன?
தந்திரமா தன்வினைப்பயனா வரலாறா
தமக்குள் கேட்கிறார்கள்.
எல்லாம் மாயை
ஒரு சித்தனும் கூறுவான்
பிரபஞ்சம் அறிந்து விரிந்தபோது
மானிட வாழ்வு மட்டும்
எப்படிப் பூச்சியமானது?
பறித்துப் பிரித்தெடுத்து
முழுவதும் விழுங்கும்
குரங்குபோல்
வந்த தூதர்களின் மூச்சொலி
இன்னமும் கேட்கிறது.
வழக்காட முடியாத தமிழ்ச்சாதியோ?
என்றான் ஒரு கவிஞன்.
பிரபஞ்சத்தின் வெற்றியில்
தூசாக அடிபட்டுப் போன
மானிட ஜாதி இதுதானா?
வேரெது குரலெது
மரத்தடிப் பிச்சைக்காரன்போல்
கேட்டுக் கொண்டேயிரு!
தட்டில் மட்டும்
அப்பப்போ
சில சில்லறைகள் மட்டும் விழக்கூடும்.
231220101038