ஏப்ரல் 02, 2023

சுண்டெலிகள் பெருகிவிட்டன

- துவாரகன்


இந்தச் சுண்டெலிகளுக்கு 
பள்ளிகளும் இல்லை
ஆசிரியர்களும் இல்லை. 
அவற்றுக்குத் தெரிந்ததெல்லாம் 
கருவாட்டு வாசனையும் 
தேங்காய்ச் சொட்டுக்களும்தான்.

வீட்டு முகடுகளில் 
விளையாடித் திரிந்த எலிகள் 
இப்போது
தரையில் இறங்கி 
நடனமாடத் தொடங்கிவிட்டன. 

பூனைகள்,
எலி பிடிப்பதை மறந்துவிட்டு 
நடனத்தை ரசிக்கின்றன. 

வேறுவழியில்லை!
இனி நாங்களும் 
கைதட்டி உற்சாகப்படுத்தவேண்டும்.
இல்லையெனில் 
எலிப்பொறிகளில் 
எங்களை மாட்டிக் கொள்ளவேண்டும். 
26012023