அக்டோபர் 29, 2022

வித்தைக்காரனின் பின்னால் இருப்பவன்


-துவாரகன் 

அவரவர் நிலைக்கு இறங்கி வருகிறாய்
மனிதநேயம் என்கிறார்கள்
அவர்களோடு தேநீர் அருந்துகிறாய்
நட்பானவர் என்கிறார்கள்
அவர்களின் நலத்தை விசாரிக்கிறாய்
நல்ல மனிதர் என்கிறார்கள்
அநீதிக்கு எதிர்க்குரல் தருகிறாய்
நியாயமானவர் என்கிறார்கள்
ஏற்றத்தாழ்வை அகற்றக் கேட்கிறாய்
நீதிமான் என்கிறார்கள்
சந்நிதானத்தில் கண்மூடிப் பாடுகிறாய்
பக்தியானவர் என்கிறார்கள்
மரபுகளைக் கட்டியிழுக்கிறாய்
பண்பாடானவர் என்கிறார்கள்
உலக விவகாரங்களை உரத்துப் பேசுகிறாய்
அறிவாளி என்கிறார்கள்
 
எல்லாம் வல்லவை
கண்கள் விரிய வியக்கிறோம்.
 
ஒரு குரல்…
எல்லாம் எனக்குத் தெரியும்
கண்கட்டி வித்தை என்கிறது.
 
நீயும் வித்தைக்காரனோ?


10/2022
நன்றி : பதிவுகள்