டிசம்பர் 26, 2011

உக்கிப்போன சொற்கள்




-துவாரகன்

நாற்றத்தைத் தூவும்
சொற்களைத் தூக்கி எறி

பழைய ஓலைப்பாயைப்போல்
போகும் இடமெல்லாம்
நீதானே அந்தச் சொற்களைத்
தூக்கிச் செல்கிறாய்

வெள்ளையும் மஞ்சளுமாய்
உளுத்துக் கொட்டிக் கொண்டிருக்கும்
காய்ந்துபோன மாமரக் கொப்பென
சொற்கள்
வழியெங்கும் சிதறுகின்றன.

வீட்டு யன்னல்களை
இறுகப் பூட்டிக்கொண்டு
ஒரு கணம்
வீட்டையும் நாற்றத்தையும்கூட
குற்றம் சொல்கிறாய்.

அந்தச் சொற்களைத் தூக்கி எறி.
விறகுக்கட்டின் கீழிருந்து
செத்துப்போன ஒரு எலியைத்
தூக்கி எறிவதேபோல்!
12/2011