முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உக்கிப்போன சொற்கள்




-துவாரகன்

நாற்றத்தைத் தூவும்
சொற்களைத் தூக்கி எறி

பழைய ஓலைப்பாயைப்போல்
போகும் இடமெல்லாம்
நீதானே அந்தச் சொற்களைத்
தூக்கிச் செல்கிறாய்

வெள்ளையும் மஞ்சளுமாய்
உளுத்துக் கொட்டிக் கொண்டிருக்கும்
காய்ந்துபோன மாமரக் கொப்பென
சொற்கள்
வழியெங்கும் சிதறுகின்றன.

வீட்டு யன்னல்களை
இறுகப் பூட்டிக்கொண்டு
ஒரு கணம்
வீட்டையும் நாற்றத்தையும்கூட
குற்றம் சொல்கிறாய்.

அந்தச் சொற்களைத் தூக்கி எறி.
விறகுக்கட்டின் கீழிருந்து
செத்துப்போன ஒரு எலியைத்
தூக்கி எறிவதேபோல்!
12/2011


கருத்துகள்

  1. நல்ல கவிதை. கவிஞனின் எண்ணம் பவித்திரமானது. மேலும் நுணுகிப்பார்க்கையில் இரண்டு இடங்களில் என் புருவங்கள் நெரிந்தன. நாற்றத்தைத் தூவும் என்கிற வரிகள்.நாற்றம் தானாகவே பரவக்கூடியது. தூவுப்பட புறச்சக்தி இருக்கவேண்டும். ஆகவே தூவும் என்பது -> கமழும் அல்லது காலும் என்கிற வார்த்தைகளால் பிரதியீட்டப்பட்டிருந்தால் மேலும் அழகு.
    அடுத்தது செத்த எலியை விறகுக்கட்டிலிருந்து தூக்கி எறிந்திருந்தாற்கூடப்பரவாயில்லை. அது விறகுக்கட்டிலின் கீழே எறியப்படுகிறதென்கிற தகவல் எதற்காக அங்கே என்பது மர்மமும், இன்னும் கவிதைக்குள் மேலதிகமும்!

    இருந்தும் காத்திரமான கவிதை ! பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  2. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. ஓரிடத்தில் பிழை ஏற்பட்டுவிட்டது.தவறு என்னுடையதுதான்.

    "விறகுக்கட்டின் கீழிருந்து" என வரவேண்டும். திருத்தியுள்ளேன்.

    மற்றையது "நாற்றத்தைத் தூவும்" என வருவதுதான் எனது கவிதையின்படி சரியென நினைக்கிறேன். ஏனெனில் யாரோ ஒருவரால் தூவப்படுகிறது என்றுதான் அர்த்தம். ஆகவே தானாகப்பரவாத நாற்றம்.

    ஆரோக்கியமாக சுட்டிக்காட்டிய கருணாகரமூர்த்தி அவர்களுக்கு மீண்டும் அன்பு கலந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  3. "..நாற்றத்தைத் தூவும்
    சொற்களைத் தூக்கி எறி ..
    ஒவ்வொருவரும் தூக்கி எறிந்தால்
    ஒவ்வாரு கணமும் சொர்க்க வாழ்வுதான்.
    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  5. பழைய ஓலைப் பாயும்..உளுத்துப்போன மாமரக் கொப்பும் அருமையான உவமைகள்.
    "செத்துப் போன எலியை தூக்கி எறிவதைப் போல". தூக்கியெறிந்தால் இன்னோரிடத்தில நாற்றங்களை பரப்புகிறவர்களாக நாம் ஆகி விட மாட்டோமா.
    வெட்டிப் புதைத்துவிடு என வந்திருக்கக் கூடாதா?


    தீபிகா.

    பதிலளிநீக்கு
  6. தீபிகா, உங்கள் கேள்வி நியாயமானதுதான். சுவாரஷ்யமாகவும் உள்ளது.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நந்தினி சேவியர் மின்னஞ்சலில் எழுதியது

    Nanthiny Xavier nanthinyxavier@yahoo.com
    10:08 AM (11 hours ago)

    to me
    mika nallakavithai. thoppi alavanavarkal poddukolladdum. unkal kavithayin sotkal ukkippokathavai. vasakan . nanthinyxavier.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012