மே 16, 2022

ஐந்நூறு கிராமங்களைத் தின்னும் ஆடு

 -துவாரகன்


இருவர் சேர்க்கையால் 

கலந்த நாற்றம்

ஐவரைச் சுற்றிக்கொண்டிருந்தது.

இப்போது ஐந்நூறு ஊர்களில் வீசிக்கொண்டிருக்கிறது


எப்படியாயினும் 

அந்த நாற்றத்தைத் தீர்க்கும்

வழியெதுவும் 

அவனுக்குப் புலப்படவில்லை.


ஒருவேளை

இரண்டு கிராமங்களைத் தின்ற

அந்த வெள்ளாடு வாய்த்தால்

ஐந்நூறு கிராமங்களில் உலாவும்

நாற்றத்தைத் தின்று தீர்த்துவிடலாம்.


ஒரேயொரு பத்திரம்தான்.

எழுதித்

தலைமாட்டில் வைத்துப் படுத்திருக்கிறான்.

ஒரு வெள்ளாடு

அந்த நாற்றத்தைத் தீர்த்துவிடும்

என்ற நம்பிக்கையோடு.

15052022

மே 13, 2022

காறை பெயரும் சுவர்கள்


-துவாரகன்
உங்களைச் சுற்றி
பெரிய சுவர்களை எழுப்பியுள்ளீர்கள்.
தவறுதலாகக்கூட
எங்கள் மூச்சுக்காற்று
பட்டுவிடக்கூடாதென
இடையில் கண்ணாடிகளையும் பொருத்தியுள்ளீர்கள்.
உங்கள் சுட்டுவிரல்களுக்கும்
உங்கள் குரல்களுக்கும்
உங்கள் பொதிகளுக்கும்
ஓர் எருமைக்கூட்டம்
உள்ளதென நினைத்தீர்கள்போலும்.
நன்றாகக் கவனியுங்கள்
நீங்கள் கட்டிய சுவர்களின்
காறைகள் பெயரத் தொடங்கியுள்ளன.
உப்புக் காற்றில் கற்கள்
போறையாகிக் கொண்டிருக்கின்றன.
அத்திவாரக் கற்களின் கீழே
நீரோடிய பாதைகள் துலக்கமாயுள்ளன.
இன்னமும்
இந்தச் சுவர்கள்
பலமென்று நம்புகிறீர்களா?
கருமேகக்கூட்டம்
எப்போதும் வானத்திற்குச் சொந்தமில்லையென்று
ஒரு தவிட்டுக் குருவிக்குக்கூட
நன்றாகத் தெரியும்.
நீங்களும்
நம்பித்தான் ஆகவேண்டும்!
10042022