ஜனவரி 25, 2012

கீறல் விழுந்த ஒலித்தட்டு




- துவாரகன்

மீளவும் அதே வார்த்தைகள்
மீளவும் அதே குரல்கள்
மனம் லயிக்காத இசை.
ஆனாலும் ‘கேள்’ என்கிறது.

காது மந்தமானோரும்
மூளை மடிப்புக் குறைந்தோரும்
அந்தக் கீறல் விழுந்த ஒலியே
தங்கள் வீட்டுத் துளசிச் செடி என்றனர்.

பிரதான வீதியின் இரைச்சல்போல்,
சைக்கிள்டைனமோ சுழற்றிப்
பாட்டுக்கேட்கும் அவசரம் போல்
ஒழுங்கின்றி ஒலிக்கிறது
கீறல் விழுந்த ஒலித்தட்டு.
கழற்றி எடுத்து மாற்றுவார் யாருமில்லை.


கீறல் விழுந்த ஒலித்தட்டில்
கதை நேரம்
“நீங்கள் குரலும் கூடும் இல்லாத ஊமைப்பறவைகள்”
காகங்களைப் பார்த்துக் கூறின;
புறாக்களும் குயில்களும்.
01/2012
நன்றி - பதிவுகள், காற்றுவெளி, படிகள்