நவம்பர் 02, 2021

துறவியின் கற்குவியல்


- துவாரகன் 


கருமேகத்தால்

உன் நிலவு மூடப்பட்டிருக்கிறது. 


உன் நாவு 

எப்போதாவது 

அந்த வார்த்தைகளை 

உச்சாடனம் செய்ததா?

பெருவெளிக்குள் 

நுழைய முடியமுடியாதபடி 

உன்னைப் போர்த்தியிருக்கிறாய்.


நான் ஒதுக்கித் தள்ளியவற்றுள் 

ஒரு மூக்குமின்னியை

நேற்றும் நீதானே கண்டெடுத்தாய்.


அந்தக் கற்குவியல் 

மற்றவர் கணக்கல்ல.

உனது கணக்கு

அதற்கு சாட்சியம் நீயே!


கமண்டல நீராவது 

கிடைக்கவேண்டும் என்றால்

வேடத்தைக் கலைத்துவிடு.

02112021

http://www.easy24news.com/2021/11/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81/?fbclid=IwAR1uSdB6_7eiXE_xNw8HMI7cCHggt2EbZzlP2WhVQYhIHRcps3vNdSrNNzc

பத்துக் கட்டளைகள்



 - துவாரகன் 


உனக்கு பத்துக் கட்டளைகள்

கற்றுத்தர ஆசைப்படுகிறேன்.

 

முதலில் பல்லிளிக்கக்

கற்றுக் கொள்ளவேண்டும்.

பின்னர்

எண்ணெயில்லாமல்

பந்தம் பிடிக்கவேண்டும்.

இன்னமும்

அவர்கள் நடக்கும்போது

வால் நிலத்தில் படிந்து அழுக்காகாமல்

பார்த்துக் கொள்ளவேண்டும்.

வீட்டுச் சுவருக்கு 

கூலியில்லாமல் வர்ணம் பூசவும்

மதிய இடைவேளையில்

ஏற்றியிறக்கவும்

பழகிக் கொள்ளவேண்டும்.

தேவைப்படும்போது

உன் மூளையை கழற்றிவைத்துவிட்டு

கோயில் மாடுபோல்

எல்லாவற்றுக்கும் ஆட்டவேண்டும்.

தாவவும் தழுவவும் தட்டிக்கொடுக்கவும்

தெரிந்திருத்தல் வேண்டும்.

மிக முக்கியமாக,

குதிரையேற்றம் பழகியிருத்தலும்

அந்தரவேளைகளில்

உனக்கும் அவர்களுக்கும்

உதவியாய் இருக்கக்கூடும்.

 

என்ன பத்துக் கட்டளைகளும் சரிதானே?

அப்படியானால்,

கதவைத் திறந்து

நீ உள்ளே வரலாம்.

25102021.

https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/136245/?fbclid=IwAR1EyihJxZfF3FUO2bpSQuYoAL4BxCv-wnJgnjzY-ODWiJztPU9pWlIVFsk

கடவுள் மறைத்து வைத்த உலகம்



- துவாரகன் 


கொள்ளைக்காரரின் கண்களிலிருந்து 

கடவுள் 

அந்த உலகத்தை 

மறைத்து வைத்திருந்தார்


அது குழந்தைகளின் உலகம்


அங்கே

பறவைகளின் சங்கீதம் இருந்தது

காற்றுக் கரங்களின் 

அரவணைப்பு இருந்தது. 

தாய்மடியின் உயிர்ப்பு இருந்தது


கொடியோரின் சுவடுகள் இல்லை

சுட்டுவிரல்களின் அசைவுகள் இல்லை

உயிர் பறிக்கும் குழிகள் இல்லை


நீரும் நிலமும் வெளியும் 

வரைந்து வைத்த 

ஓவியங்கள் இருந்தன


உங்கள் திமிர்த்த பார்வைகள் 

அங்கு படவேண்டாம்

உங்கள் பாவப்பட்ட கரங்கள் 

அங்கு தீண்ட வேண்டாம்


அது குழந்தைகளின் உலகம். 

17102021

https://vanakkamlondon.com/literature/kavithaikal/2021/10/135190/?fbclid=IwAR3XZgS_zLd0Q3c_pIiMPHU2SPaL_YftBq4oTRLONQdHIqzT-9_eJ6YB61c