முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகரம்



                                      -துவாரகன்

வண்ணமாய் மின்னும் நகரம்
அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது.

ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல்
யார் யாரோவெல்லாம்
இந்த மனிதர்களை இயக்குகிறார்கள்.

கடமைக்கு விரைந்தவன்
கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை
விலைபேசிக் கொண்டிருக்கிறான்.

கழுத்துப்பட்டி சப்பாத்து
அட்டைகள் பத்திரங்களுடன்
பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை
ஏமாற்றப் புறப்படுகிறார்கள்
இன்னுஞ்சிலர்.

மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம்
வைத்தியசாலை வாசலில் நின்று
பிச்சை கேட்கிறான் ஒருத்தன்.

பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க
கண்ணை மின்ன மின்ன
அதிசயப் பிராணிகளென
படம் பிடிக்கிறார்கள்
வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.

தனியே சிரிப்பவர்களும்
வீதியில் கனாக்காண்பவர்களும்
கண்ணாமூச்சி விளையாடுபவர்களும்
கண்டுபிடிக்கப்படுபவர்களும்
இன்னும் நவீன பைத்தியக்காரராய்
உருமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளும் செல்லப்பிராணிகளும்
கூடவேஉள்ள
சொற்ப மனிதர்கள் தப்பித்துக் கொள்ள;
மின்னும் நகரம்
பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது!
08/2012
--

கருத்துகள்

  1. யாதார்த்தங்களை அழகாக அறைந்து சொல்கிறது கவிதை
    இந்த மாற்றங்களை உள்வாங்கிய என் சமூகம் நாளை என்னாகுமோ ?

    படம் பிடிக்கிறார்கள்
    வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.
    இவர்கள் வேறு யாருமல்ல ......
    மனிதம் தொலைத்தவர்களே .................

    வாழ்த்துக்கள் சமகாலத்தை பதிவு செய்தமைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  2. நிச்சயமான உண்மைகளை பேசுகிறிர்கள் .தொடருங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. அ.யேசுராசா மின்னஞ்சலில் எழுதியது.

      athanas jesurasa

      6:09 AM (0 minutes ago)

      to me
      கவிதை பிடித்தது.


      "கழுத்துப்பட்டி சப்பாத்து
      அட்டைகள் பத்திரங்களுடன்
      பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை
      ஏமாற்றப் புறப்படுகிறார்கள்
      இன்னுஞ்சிலர்."

      ஊரெங்கும் விரிந்து நடக்கும் , ஒழுங்கமைக்கப்பட்ட மோசடிகளின் வகைமாதிரி!
      - அ.யேசுராசா

      நீக்கு
    2. அ. யேசுராசா அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. "..பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க
    கண்ணை மின்ன மின்ன
    அதிசயப் பிராணிகளென
    படம் பிடிக்கிறார்கள்
    வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள்.."
    உண்மையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  5. vaazthukkaz,,,urakka uraittha kavithai varigaz,,,thodarattum.

    பதிலளிநீக்கு
  6. Jogeswari Sivapiragasam sjogeswari@yahoo.com

    3:43 AM (0 minutes ago)

    to me
    உண்மை ஒன்று நிமிர்கிறது

    பதிலளிநீக்கு
  7. பைத்தியம் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது.
    அழகான வாழ்க்கையை நவீனம் உறிஞ்சியெடுக்கிறது.
    அன்பு மட்டுமே தெரிந்த மனிதர்களின் மனசில்
    எல்லா நச்சுக்கொடிகளும் படரவிடப்படுகிறது.
    உணர்வுகளால் பின்னிக்கிடந்த கிராமங்களெல்லாம்
    உயிர்வலிக்க உயிர்வலிக்க உருமாறுகிறது.
    கரம்....ரகம்...என ஆக்கப்படுகிறது.
    ந..கரம்...ந..ரகம்...என்றாகி கசக்கிறது.

    அந்த நிஜங்களின் நிதர்சனங்களை
    புரியவைக்கிறது இந்த நகரம் கவிதை.

    பதிலளிநீக்கு
  8. உண்மையை வித்தியாசமாக சொல்கிறார்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012