முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சபிக்கப்பட்ட உலகு -1



-துவாரகன்-


மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது

எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று

எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?

அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?

சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.

பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்

மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்

வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று

மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது
241120100131
*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு

கருத்துகள்

  1. நல்லா இருக்கு துவாரகன்.
    உங்கள் தளம் படிக்கிறேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

    இணைப்பை அனுப்பியதற்கு
    நன்றிகள்.
    றியாஸ் குரானா

    பதிலளிநீக்கு
  2. நன்றி றியாஸ் குரானா. உங்கள் மாற்றுப்பிரதிக்கு எனது வலைப்பதிவிலும் இணைப்புக் கொடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. உணர்வோட்டமுள்ள நல்ல கவிதை.
    "..தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளானது.." சாதாரமானவன் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  4. சரியாகச் சொன்னீர்கள் டொக்டர். மண்புழுக்களும் எறும்புகளும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு குறியீடாகச் சொல்கின்றனவோ?

    பதிலளிநீக்கு
  5. அன்பின் துவாரகன்.
    கவிதை நன்று.
    வாழ்வியல் அனுபவம் கவிதையாய் அமைந்திருக்கிறது.
    காற்றுவெளியும் பெருமை கொள்கிறது.
    வாழ்த்துக்கள்.
    நட்புஅடன்.
    முல்லைஅமுதன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...