ஜனவரி 24, 2022

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்

 - துவாரகன்


இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்?

பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய்.

இனிப்புப் பலகாரங்களையும்

சில புதிய ஆடைகளையும்

வாங்கி வைத்திருப்பாய்.

பவுடர் அப்பிய முகத்துடன்

புன்னகை பூத்தபடி,

படியேறும்போது

எந்த வார்த்தையை

முதலில் பேசவேண்டுமென்று

மனப்பாடம் செய்து கொண்டிருப்பாய்.

ஆனால்,

உன்னைப் பார்த்து

நான் பரிதாபப்படுகிறேன்.

உனக்காக.

ஐந்து பகல்களும்

இரண்டு இரவுகளும்

அன்னியனின் ஆயிரத்தெட்டு வண்ணங்களையும்

புலுனிகளின் கீச்சிடலுக்கும்

நாய்களின் குரைப்புகளுக்குமிடையே

நெருப்பில் சுட்ட

கருவாட்டு வாசனை நினைப்பில்

இதயம் கருக

ஏற்றுக்கொண்டாளே!

அது

நீ தேடிக்கொடுத்த

சுயநல இருள்.

உயர்ந்த நீர்த்தாங்கியில்

தொங்கிக் கொண்டிருக்கும் குளவிக்கூடுபோல்,

எல்லோர் கண்களிலும் துலங்குகிறது

வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்.

நீ தேடிக் கொடுத்த பரிசுகள் அவை.

அவளின் கட்டை தீயில் வேகும்வரை

ஆறாதது!

14012022

http://www.easy24news.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக