முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை


-துவாரகன்-

பாறாங்கற்களிலும் தாழைமரங்களிலும்
தம்மை மறைத்துக் கொண்டிருந்த பாம்புகளுக்கு
இப்போ செட்டை கழற்றும் வயசாச்சு.

கண்டவர் அஞ்சும் கோலங்கள் இட்ட
தம் செட்டையை
குழந்தைகளுடன் குதூகலிக்கும் ஆசையில்
கழற்றிக் கொண்டிருக்கின்றன.

பஞ்சுமிட்டாய்க்காரன் போலவும்
பலூன்காரன் போலவும்
பபூன் போலவும்
குழந்தைகளுக்கு ஆசையூட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பாம்புகள்தான்
எங்கள் வீடுகளில் நுழைந்து
குழந்தைகளைப் பயமுறுத்தியவை.
இந்தப் பாம்புகள்தான்
எங்கள் குழந்தைகளை
நித்திரையில் தீண்டிவிட்டுப் போனவை.
இந்தப் பாம்புகள்தான்
பிள்ளைகளின் பாற்கலயத்தில்
விசத்தைக் கக்கிவிட்டுப் போனவை.

இடறி வீழ்ந்துகிடந்த எங்கள் பிள்ளைகளை
ஓர்ஆட்டுக்குட்டியைப்போல்
இறுக்கி முறித்துக் கொன்றவையும் இவைதான்.

கொடிய விசத்தை
இரட்டை நாவுக்குள் மறைத்து கொண்டு
இராட்டினத்தில் ஏறி
குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படும் பாம்புகளுக்கு
இப்போ மட்டும்
இந்தக் கருணை எங்கிருந்து பிறந்ததாம்?

குழந்தைகள் பாவம்
அவர்களை விளையாட விட்ட
தாய்மாரும் ஏதுமறியார்

கபடதாரிப் பாம்புகளே
இனியாவது கொஞ்சம் விலகியிருங்கள்.
191020101207
நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)

கருத்துகள்

  1. கவிதையின் கருத்து ஒரு பொது எதிரியை உருவகமாக
    பொதுமைப்படுத்தியுள்ளது. குட்டு யாருக்கு என்பதைத் தெரியப்படுத்துவதில் பூடகம் ஏன்?

    பதிலளிநீக்கு
  2. மக்கள் விடுதலை முன்னணியே நீ வாழ்க! எண்கள் தாய்மார் பிளைகளுக்காய் வருந்துவது போல் நன்றாகவே நடிக்கிறாய் !
    உன் உண்மை முகம் எல்லோருக்கும் தெரியும்
    ஓநாய் களே ஆடு நனைகிறதென்று அனுதாபப் படவேண்டாம்

    பதிலளிநீக்கு
  3. மிக அழகாக சொல்லியிருக்கிறியள் துவாரகன். எனக்கு இந்தக் கவிதை தருகிற உணர்வு மிக ஆழமாக தொடுகிறது. யுத்த காலத்தில் நான் “குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்“ என்று குறிப்பிட்டதின் தொடர்ச்சியாக “பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை“யை வாசிக்க முடிக்கிறது.

    பாம்புகளால் குழந்தைகளுக்கு நிகழ்ந்த துயரங்களும் இன்றைய பாம்பின் புன்னகையும் கருணையும் அதன் பயங்கரமும் தெளிவாக புலப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. திரு.துவாரகன்.
    வணக்கம்.
    கவிதைகள் நன்றாக வந்துள்ளன.
    வாழ்த்துக்கள்.
    'காற்றுவெளி'யில் பிரசுரம் செய்கிறேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    நட்புடன்,
    முல்லைஅமுதன்

    பதிலளிநீக்கு
  6. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
    உட்கருத்து எதுவாயினும், இது தனது உணர்வைப் பேசுகிறது என வாசகனை நினைக்க வைத்தால் அது நல்ல படைப்பே. பகிர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  7. காருண்யன், நிர்மலன்,தீபச்செல்வன்,வேலு,முல்லை அமுதன், டொக்டர் முருகானந்தன், அனைவரின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அருமை. தொப்பி யாருக்கு பொருத்தமோ அவரவர்கள் அதை அணிந்து கொள்ளட்டும். ஆனால் வாசகர்களை சிந்திக்க வைத்தாலே அப்படைப்பு வெற்றியடைகிறது. உங்கள் படைப்பும் வெற்றியே.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. போருக்குப் பின்னரான தமிழ்ச்சூழல்தான் இக்கவிதையை எழுதத் தூண்டியது.

    'விசரன்' என்று பெயர் குறிப்பிட்டுக் கருத்துக் கூறிய நண்பருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012