முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கள் குழந்தைகள்


-----துவாரகன்

எங்கள் குழந்தைகள்
வீடுகளைத் தொலைத்து விட்டார்கள்
எங்கள் குழந்தைகள்
வீதிகளைத் தொலைத்து விட்டார்கள்
எங்கள் குழந்தைகள்
சிரிப்புகளைத் தொலைத்து விட்டார்கள்
இனியும்
அவற்றைத் தேடிக் கொள்வோம் என்ற நம்பிக்கை
எங்கள் கைகளை விட்டுத்
தூரப் போய்விட்டன.
படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல்

இப்போ எங்கள் குழந்தைகளுக்குத் தேவை
வானவில்லும் நட்சத்திரங்களும் அல்ல
நடந்த களைப்புத் தீர
ஒரு முள்ளில்லாப் பற்றை
தாகம் தீர்ப்பதற்குக்
கொஞ்சம் குடிதண்ணீர்

051020082250

கருத்துகள்

  1. on facebook...

    Jeyakumar Antoni தொலைந்துவிட்ட எங்கள் குழந்தைகள் , தொலைத்துவிட்டவற்றைத் துலாம்பகரமாகத் தருகிறது கவிதை. சிரிப்பைக்கூடத் தொலைத்துவிட்ட கொடுமை அந்தச் சின்னஞ்சிறுசுகளுக்கு. யாருமற்ற அனாதைகளாகத் , தேடுவாரற்று , முளையிலே கருக்கப்பட்ட அந்தப் பசுந்தளிர்களுக்குத் தற்போதைக்குத் தேவை தலைசாய சிறுபற்றை, தாகத்துக்கு சிறிது தண்ணீர்........... சிறியதோர் ஓய்வுக்குப்பின் , உயிர்வாழ்வைத்தேடி மீண்டும் அலைச்சல் ................... வல்லூறுகளிடையே கோழிக்குஞ்சுகளாக , எமது குஞ்சுகள். நிஜங்களைத் தத்ரூபமாக்குகிறது கவிதை. தோற்றுவிட்டோம் நாமெல்லோரும், எங்கள் குழந்தைகளைத்தேடி. ஆனாலும் நாம் தொலையக்கூடாது . ஏனெனில் அந்த சிறுசுகளின் நம்பிக்கை நாங்கள்தான். “தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் ” , நம்புவோம். நிஜத்தை நிஜமாகக் காட்டியமைக்கு வாழ்த்துகள்.
    Yesterday at 05:56 · Like

    பதிலளிநீக்கு
  2. thanks _vaarppu.com

    வாசகர்களின் கருத்துக்கள்
    பெயர்
    கந்தையா சோதிதாஸ் நாடு Sri Lanka
    தளம்
    திகதி 2011-10-24
    [1]
    படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல் -அழகான உவமை தமிழர் எதிர்காலம் இப்படித்தான் இருக்கிறது.யதார்த்தம் கவிதையை காவியம்ஈக்கிஇருக்கிறது வாழ்த்துக்கள்.
    -வேலணையூர்தாஸ்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...