முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாத்தான்களின் உலகம்



-----துவாரகன்

மனிதர்களைப் போலவே
வருகின்ற துன்பங்களுக்கும்
கொஞ்சமும் இரக்கமில்லை.
எப்படித்தான்
எல்லாத்துயரங்களும்
ஒன்றாய்த் திரண்டு விடுகின்றன?
சுடுகாட்டில் அடக்கம் செய்ய
ஆயத்தமாகிய பிணத்தின் முன்
கொள்ளிக்குடம் சுற்றிக் கொள்ளும் உணர்வுடனே
எங்களின் காலங்கள் கழிந்து கொள்கின்றன.
இத்துயரங்களைப் போலவே
அதை வருவித்துக் கொள்ளும் மனிதர்களுக்கும் கூட
கொஞ்சமும் இரக்கமில்லை
வீதியில் வாகனத்தின் சில்லுகளிடையே
நசிந்து செத்துப்போன
ஒரு குட்டிநாயின் வாழ்வுபோல்
நாம் வாழும் காலங்களும் செத்துப் போகின்றன.
யாரிடம் சொல்லி ஆற்றுவது
யார் யாரைத் தேற்றுவது
கொல்லும் வீரியத்தோடு
கோரப்பற்களைக் காட்டியபடி
மரணம் முன்னால் வந்து
எக்காளமிட்டுக் கொக்கரிக்கிறது.
மரணத்தின் கூரிய நகங்கள்
எம் தொண்டைக்குழியில் ஆழ இறங்குகின்றன.
அதன் கடைவாய் வழியாகவும்
நாக்குகளின் மீதாகவும்
இரத்த நெடி வீசியபடியே உள்ளது
எங்கும் மரண ஓலம்
எங்கும் சாவின் எச்சம்
எங்கள் வாழ்வுக்காக
இன்னமும் வாழும் ஆசையுடன்
அம்மணமாய் நின்று உயிர்ப்பிச்சை கேட்கின்றோம்.
கைநீட்டி அழைக்கும் கரங்களுக்கு நடுவிலும்
குறிபார்த்தபடி குறுவாள் ஒளிந்திருக்கிறது
இது சாத்தான்களின் உலகம் என்பதால்
கடவுளர்களுக்குக்கூட
வேலையில்லாமற் போய்விட்டது.
300120092005

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...