- துவாரகன்
வீட்டுக்குத் தினமும் வரும்
புலுனிகளோடு
என் வார்த்தைகளைப்
பரிமாறிக் கொண்டேன்
எந்தப் பயமுமின்றி அருகே வந்து
தத்தித் திரிவன அவை
சோற்றுப் பருக்கைகளையும்
தானியங்களையும்
தங்கள் சுகதுக்கங்களைப் பேசியபடியே
கொத்தித் தின்றன
பின்னர் விடுவிடுவென பறந்து போயின
என் வார்த்தைகளின் அர்த்தத்தை
மற்றப் பறவைகளும்
புரிந்து கொண்டதில்
காற்றில் மிதந்த புழுகம் எனக்கு
ஒரு மாலைநேரம்
மூஞ்சியை நீட்டிக்கொண்டு
ஒரு கூட்டமே படையெடுத்தது
அன்பு என்ற ஒற்றைச் சொல்
தம்மைப் பயமுறுத்தி விட்டதாம்
நான் கொடுத்த
தானியங்களை மட்டும்
திருப்பித் தந்துவிட்டுப் பறந்தன.
06/2026

கருத்துகள்
கருத்துரையிடுக