ஜூலை 11, 2022

மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம் 2

 


- துவாரகன்

அதிகாரத் திருடர்கள்
பாயைச்சுருட்டி
கப்பலைக் கட்டையில் ஏற்றிவிட்டு
ஜோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வயலில் வலைவீசு என்கிறான் ஒருவன்
தோணியில் பயிர்செய்யப் போவென்கிறான்
மற்றொருவன்.
கட்டடக்காடுகளில் இருந்து
உலகைச் சிருஷ்டித்தவர்களுக்கு
ஒருபோதும்
வியர்வையின் உப்பு
கரிக்கப்போவதில்லை.
கழனிகளைக் காடாக்கி
கொவ்வைப்பழமும் புல்லாந்திப்பழமும்
தேடித்தின்னும் காலத்தை
எமக்குத் தந்தார்கள்.
பொற்குவையும் காசுகளும்
தோம்புகளும்...
பானையில் அவித்துக்
குடிக்கலாமென்று கண்டுபிடித்தார்களாயின்,
அவர்களுக்கு
காடுகள்கூட தேவைப்படாது போகலாம்.
எங்களுக்கு
மீண்டு வந்ததொரு காலம்.
மீளவும் மரங்களில் தொங்கிவிளையாடவே!
13062022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக