ஏப்ரல் 07, 2022

உனது கடலில் வேறொருவன் நீச்சலடிக்கிறான்



-துவாரகன்


உனது கடலை
பிரியமுடன் அவளுக்குப்
பரிசளித்தாய்
புனிதம் என்றார்
புன்முறுவல் சேர்த்தார்

கடலை விட்டு
பெருவீதியில் நடக்க ஆசைப்பட்டாய்
வாகன நெரிசலிடை முக்குப்பட்டாய்
வானத்தால்
பறந்தாவது செல்வேன் என்றாய்

குறுக்குவழியே
முன்னோர் அனுபவம்

முருங்கைக்காய் கட்டும்
கறுத்தக்கொழும்பானும்
பழைய விதிகள் என்றாய்.

முனியப்பருக்குப் பதில்
முனியப்பரே முன்வந்தார்.

மரபை மாற்றினாய்
சான்றுகளைக் குப்பையில் வீசினாய்
கபடமும் அசூசையும் நிறைந்த
கள்ளப்பாதையொன்று திறந்தது

நீயோ,
பாவங்களின் மீதேறிநின்று
மமதையுடன்
பல்லிளித்துக் கொண்டிருக்கிறாய்.

அவரவர் கடலில்
அவரவர் நீச்சலடிக்க,
உனது கடலில் மட்டும்
வேறொருவன்
நீச்சலடித்துக் கொண்டிருக்கிறான்.
02042022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக