அக்டோபர் 02, 2021

என் குழந்தையைக் களவாடியவன்


-       துவாரகன்

 

மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளை

கன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்

எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.

எண்ணெய் பூசி

தடுக்கில் வளர்த்தியிருந்தபோது

அந்தத் திருடன் களவாடி விட்டான்.

 

நேர்த்திக் கடன் கழித்த

சந்நிதியின் வாசலிலே

முல்லைச் சிரிப்புடன்

கைகளில் தவழ்ந்தது கண்டு

அன்பு கொண்டவன்.

கன்னக்குழியின் அழகுபேசி

கதை கேட்டவன்.

 

சற்று நாங்கள் கண்ணயர்ந்தபோது

ஓசைப்படாமல் வந்து

களவாடிவிட்டான்.

 

மார்பிருத்திச் செல்லங்கொஞ்சிய

மனது வலிக்க

நாட்களை எண்ணிக்கொண்ட

பச்சை வயிறு தவிக்க

ஊசலாடும் வெற்றுடல்கள் ஆனோம்.

 

புதியபெயர் சூட்டி

புரியாத மனிதரிடம் அகப்பட்ட 

என் குழந்தையைக் கண்டீராயின்

தேடித் தருவீரோ அன்பரே!

19072021

(தடுக்கு : குழந்தைகளுக்குரிய சிறிய ஓலைப்பாய்)

நன்றி : இலக்கியவெளி 2021

https://vanakkamlondon.com/literature/2021/09/131701/?fbclid=IwAR25iiYTqYkdeZLjfH4fIeIrHTKcSktyn7Er59lGDKYmbwVAJCCU_goJ_50

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக