அக்டோபர் 08, 2012

ஊழிப்பெருமழையில் தப்பிப் பிழைத்தவனின் பாடல்


 
- துவாரகன்

கண்ணிருந்தும்
கள்ளிப்பால் பட்டவர்போல்
குருடாயிருந்து கொன்றவரும்
சுட்டுவிரல் காட்டி இன்னும் கொல்பவரும்
இந்தத் தீவின்
சீழ்கொண்ட மானிடர் என்பேன்.

இழிந்தவரை…
நெடிக்கு நெடி சபித்துக்கொண்டே இருப்பேன்.
ஆனாலும்
இன்னும் இன்னும் தோத்திரமும் செய்வேன்.

ஆகப்பெரிய தண்டனை தந்த
ஊழிப்பெருமழையில்
எங்கள் உயிரும் உடலும் காத்த உறவுகளை
எப்படி மறப்பேன்.

தூக்கிய துவக்கைத் தாழ்த்தி
போவென்று விட்டானே ஒருவன்
முகந்தெரியா அவன் இதயம் வாழ்க.

துண்டங்களாய் தொங்கிய உடலத்தை
பிரித்துப் பொருத்தி உயிர்காத்தானே
ஒரு மருத்துவன்
அவன் பாதங்கள் என்றும் வாழ்க.

சுமந்து வந்த சுற்றம்
கூட இருந்த நட்பு
உயிர் காத்த உறவு
எப்படி மறக்கமுடியும்?

இந்தத் தேசத்தின் நன்னீர்ஓடைகள் நீங்கள்
உங்களுக்கு ஆயிரம் தடவை தோத்திரம்.
10/2012
---

10 கருத்துகள்:

  1. மனிதம் இன்னமும்
    மரணித்துவிடவில்லை.
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர்.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் கொல்பவரும்
    இந்ததீவின்
    சீழ் கொண்ட மனிதர் ................
    அனல் தெறித்து விழுகிறது வார்த்தைகளில். நன்றி ஐயா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நெற்கொழுதாசன்.

      நீக்கு
  4. துவாரகன் உங்களுக்கு அன்பான என் வேண்டுகள் - SLAS, SLEAS இந்த பரீட்சைகளுக்காக Aptitue என்ற ஒரு வினாத்தாள் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்தானே! அதில் குறைந்தது 5 வினாக்கள் யாருமே புரிந்து கொள்ள முடியாத கேள்விகளும் கட்டாயம் வருவது நியமம். அதற்கான விடையினை அவ் வினா பத்திரத்திற்கான ஸ்கீம் வந்த பிறகுதான் எல்லோருக்கும் புரிய வரும். அது போலவே இங்கு நிறையப் பேர் கவிதை படைத்து அதந்தக்கால மரபு கவிதைகளை விடவும் கடுமையாக எழுதி வருகிறார்கள். மரபுக் கவிதை என்பது பண்டிதர்களுக்கும், படித்தவர்களுக்கும்தான் புரியும்.பாமரனுக்கும் இலகுவில் புரிந்து ஒரு சிந்தனையை அவனும் வளர்த்துவிடவே இந்தப் புதக்கவித தோன்றியிருக்கிறது. அதில் சில கவிதைகள் படித்தவர்களுக்கும், பண்டிதவர்களுக்கும் கூட புரியாமல் போகின்றன. ஆனால், தீபச்செல்வன், துவாராகன் கவிதைகள் வித்தியாசமானவை. மொழிகள் புதிதாக இருந்தாலும் அவை சாதாரண பாமரனுக்கும் ஏதோ ஒரு கருத்தை புரிய வைத்துவிடுகிறது. துவாரகனின் அனேக கவிதைகள், பொதுவாக டில்லாக் கவிதைகளும் படித்திருக்கிறேன். இந்த ஸ்ரையில் தொடருங்கள். தயவு செய்து விளங்காத கவிதை படைப்போரிடம் சேரங்கள். ஆனால், அததான் கவிதை அருமை, பெருமை என்று சொல்வதை நிறுத்துங்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாரும் துவாரகன் கவிதைகளையும் துவாரகனை நிச்சயம் தேடிவர வைக்கும். வாழ்த்துக்கள துவாரகன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பரே, உங்கள் நீண்ட கருத்துரை பார்த்தேன். எனது கவிதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்பதை அறிந்தேன். எனது மொழியைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. தொடர்ந்து உரையாடுவோம்.

      நீக்கு
  5. தூக்கிய துவக்கைத் தாழ்த்தி
    போவென்று (தப்ப)விட்ட இராணுவ வீரனும்...

    துண்டங்களாய் தொங்கிய உடலத்தை
    பிரித்துப் பொருத்தி உயிர்காத்த
    மருத்துவனும்...

    இவ்வுலகில் மானுடம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதை நிமிர்ந்து நின்று நினைவுறுத்துகிறார்கள்.

    நன்றி மறவா நெஞ்சமுள்ள துவாரகன் - ஒரு புறத்தில் கொஞ்சமும் இரக்கமற்ற அரக்கரையும் மறுபுறத்தில் இதயம் மட்டுமே படைக்கப்பட்ட தேவரையும் ஒருங்குசேரக் கண்டு எமக்கெழுதி அனுப்பிய கடிதமே இது. காத்துப் போற்றுவேன்.

    பதிலளிநீக்கு
  6. ராஜாஜி ராஜகோபால் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு