ஜனவரி 16, 2010

* யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டை

-----துவாரகன் ஒரு நாள் என் வீடு இருந்தது. வயல்வெளிக்கு நடுவே ஆலமர விருட்சம் போல் அரைக்காற்சட்டையோடு அண்ணா டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான் அப்பா விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார் மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும் குளத்தில் வரால் மீன் பிடிக்கவும் சின்னத்தம்பி என்னுடன் வருவான். தங்கையும் நானும் கதை பயில தேக்கமரமும் மலைவேம்பும் எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள். மாலையானதும் மாடுகள் அசைபோடுவது போல் உறவுகள் சுற்றியிருந்து அன்பை அசைபோடுவோம். அம்மாவும் பெரியக்காவும் சுவையாகச் செய்த சாப்பாடு. செய்திக்குப் பின் அப்பா என்னிடம் தரும் றேடியாவில் வழிந்து வரும் பாட்டு. காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம் எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன். இப்போ இரண்டு காவலரனுக்கு நடுவில் மழை வெள்ளம் தரைதட்ட தொண்டு நிறுவனம் தந்த படங்கு காற்றில் அடிக்க எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில் அம்மாவின் காய்ந்த விழிகளோடு நானும் காத்திருக்கிறேன். யாரோ போட்டு முடித்து முகாமொன்றில் தானமாகக் கிடைத்த ஒரு இரவுச் சட்டை என்னை மூடிக்கிடக்கிறது. 241220091122
 * (தலைப்பு அ. முத்துலிங்கத்தின் கதையிலிருந்து எடுக்கப்பட்டது.)

4 கருத்துகள்:

  1. அன்புமிக்க துவாரகன் காலத்தை மிகுந்த உக்கிரத்துடன் பதிவு செய்பவை உங்கள் கவிதைகள் என்பதை இந்தக் கவிதையும் நிரூபிக்கிறது. வாழ்த்துக்கள்

    அன்புடன் அஜந்தகுமார்

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே, தங்கள் வலைப்பதிவு பார்த்தேன். தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. இது யாரின் கவிதை

    முத்துலிங்கத்தினுடையதா உங்களுடையதா?

    பதிலளிநீக்கு
  4. கவிதை என்னுடையதுதான். ஆனால் தலைப்பு முத்துலிங்கத்தினுடையது. அவரின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' படித்தபோது அந்த வரிகள் கவிதைக்குரியதாக எனக்குப் பட்டது.

    பதிலளிநீக்கு