- துவாரகன்
அது புதிய வண்ணத்துப்பூச்சி
அதன் வரவு மகிழ்ச்சியானது
தேன் குடிப்பதற்குப் பதிலாக
எங்களோடு சேர்ந்து
கஞ்சி குடிக்கவும்
கூழ் குடிக்கவும்
பண்டிகைகளில்
பலகாரம் சாப்பிடவும் கூடுமென
ஆரூடம் கணித்தனர்.
மிக அரிதான
செவ்வாச்சிவகை என்றும் கூறினர்.
அதன் வருகை கண்டு
அம்மம்மா மிக மகிழ்ந்தார்.
சாமியறையில் நேரமெடுத்து
வேண்டுதல்கள் செய்தார்.
அப்போதுதான் பார்த்தேன்.
புதிய வண்ணத்துப்பூச்சியும்
மற்றையதைப் போலவே
எங்கள் வீட்டுச் செவ்வரத்தையில்
தேன்குடித்துக் கொண்டிருந்தது.
நான் வைத்த கஞ்சியோ
பாயாசமோ
பிடிக்கவில்லைப்போலும்.
அது பறக்கும்போது
தன் இறகுகளை அடித்துக்கொண்டுதான்
பறந்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக