முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல் ஈறுகளில் நெளியும் புழுக்கள்

-----துவாரகன்

எப்போதும் ஆவென்றபடி கிடக்கும்
உன் வாயிலிருந்து
புழுக்கள் நெளிவதை
நானும் கண்டு கொண்டேன்.

நூற்றாண்டுகளுக்கு முன்
உன் தந்தையர் கடித்துச் சுவைத்த
நரமாமிசத்தின் மீதியிலிருந்து
உனக்கான புழுக்கள் உருப்பெற்றிருக்கின்றன.

அழுகி வடியும் துர்முகத்தினூடே
புண்களால் வழிந்தொழுகும் நிணத்தினூடே
கற்றை கற்றையாய் எட்டிப் பார்க்கின்றன
பற்களிலிருந்து வெளிப்படும் புழுக்கள்

செத்துப்போன மிருகங்களின் உடல்களிலும்
அழுகிப்போன பண்டங்களிலும்
மூக்கைச் சுழிக்க வைக்கும் மலத்திலும்
நான் கண்டு கொண்ட நெளியும் புழுக்களை
இன்று உன் பல் ஈறுகளிலும்
கண்டு கொண்டேன்.

உன் கதையினூடேயும்
உன் செயலினூடேயும்
உன் நாவுக்கும்
விரல்களுக்கும் அவை தாவுகின்றன
கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கும் தொற்றிவிடுமோ என்று
இப்போ நானும் அச்சம் கொள்கிறேன்.

என் அப்பா, அப்பாச்சி கூட
உன் தந்தையர் பற்களிலிருந்து
முன்னரும் புழுக்கள் நெளிந்ததைக்
கண்டு கொண்டதாகச் சொன்னார்கள்.

நூற்றாண்டுகள் கழிந்த பின்னும்
நரமாமிசம் தின்ற வாயை
தண்ணீர் விட்டுக் கொப்பளிக்க
இன்னுமா உனக்குத் தெரியவில்லை?

ஆறாத புண்ணிலிருந்து
உற்பவிக்கும் வெள்ளைப் புழுக்கள்
இனி, முல்லைப் பல் காட்டிச் சிரிக்கும்
உன் குழந்தைக்கும் தொடர வேண்டாம்.
300320102105

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...