முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துயர மலைகளைச் சுமக்கும் மடிகள்


-----துவாரகன்

உரையாடலின் நடுவில்
‘இது எனது மூத்தவனின்’ என்றபடி
அந்தப் பச்சைப் பிளாஸ்ரிக் கோவையை
என்னிடம் தந்தபோது
என் கைகள் நடுங்கின
அவனைத் தாங்குவதுபோல்
மிக மெதுவாகப் பற்றிப் பிடித்தேன்.

பள்ளியில் அவன் பெற்ற
பெறுபேறுகள் சான்றிதழ்கள் திறமைகள் எல்லாம்
அந்தக் கோவையில் இருந்து சிரித்தன
என் கைவிரல்கள் ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டிருந்தன.

அந்த பெரிய உருவத்தில் சின்னக் கண்களும்
பழைய கரியல் வைத்த சைக்கிளில்
எப்போதும் சரித்துக் கொழுவப்பட்ட
வளைபிடியிட்ட கறுப்புக் குடையும்
சின்னச் சிரிப்புடன் கதைகூறும் மென்மையும்
ஒவ்வொரு சான்றிதழ்களிலும் படமாய்த் தொங்கின.

உன் அன்னை
நீ படிக்கும் இரவுகளில்
நித்திரைத் தூக்கத்தோடு
சுவரில் சாய்ந்திருந்து காவலிருந்தாள்
உனக்குப் பிடித்தவற்றைத்
தேடித் தேடிச் சேர்த்து வைத்துக் கொண்டாள்.

தன் வாழ்நாளில் சிறுகச் சிறுகச் சேமித்து
உன்னைப் படிக்க வைத்து
உயர்வில் மகிழும் ஒவ்வொரு கணமும்
உன் தந்தைக்கு காத்திருந்த கணங்களாகியது.

முதற்பக்கத்தில் குழந்தையாய்த் தவழ்ந்த
படத்தைச் செருகி வைத்திருந்தாள் உன் தங்கை.
இறுதிப் பக்கத்தில்
அஞ்சலிப் பிரசுரத்தை
ஞாபகமாய் வைத்திருந்தான் உன் தம்பி
இந்தத் துயரமலையை
எப்படித்தான்
தாங்கிக் கொண்டாள் உன்னைப் பெற்றவள்.

‘இது என்ரை மூத்தவன்ரை தம்பி பாருங்கோ’
உன்னைப் பெற்றவன் என் கரங்களில் தந்தபோது
கண்கள் பனித்ததடா?
190320102149

(வவுனியா விவசாயக் கல்லூரி மாணவன் திருநாமம் சிந்துஜன் ஞாபகமாக)

கருத்துகள்

  1. படிக்கும்போது கண்கள் பனித்து விட்டது!!!
    ஆழமான வரிகள்,,,,தொடருங்கள்,,,,

    பதிலளிநீக்கு
  2. நண்பர் சங்கருக்கு நன்றி. உண்மைச் சம்பவங்களைக் கவிதையாக்கும்போது அந்தக் கவிதைகள் சிலவேளைகளில் மற்றவரின் உணர்வையும் தொட்டுவிடுவது உண்மைதானே.

    பதிலளிநீக்கு
  3. கவிதையின் வரிகள் உண்மையின் வலிகளாய்த் தோய்ந்து துயரமாய் என்முன்னே நிற்கிறது

    பதிலளிநீக்கு
  4. கருத்துக்கு நன்றி . உங்களின் வலைப்பதிவில் நீங்கள் ஏற்கனவே எழுதியவற்றை இணைக்கலாமே?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012