முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன்


-துவாரகன்-

ஒருநாள் நீ வந்தாய்
புதியதொரு பிறப்புச் சான்றிதழ் படிவத்தோடு
‘இதை நிரப்ப வேணும் சேர்’ என்றாய்
அப்போது நான் அறிந்தது உன்னை
தர்மேகன் என்று.

பிறப்புச் சான்றிதழில்
உன் பெயர் தர்மவேகன் என்றாய்
இருவரும் சிரித்துக் கொண்டோம்
பின்னர் சங்கடத்துடன் கூறினாய்
‘என்ன சேர் செய்யிறது?
மாறிப் பதிஞ்சிட்டாங்களாம்!
நீங்கள் இப்படியே எழுதுங்கோ’
அன்றிலிருந்து
எம் குரு சிஷ்ய உறவு தொடர்ந்தது

வசீகரிக்கும் கறுப்பு நிறத்தில் நீ
எந்நேரமும் துருதுருத்துக் கொண்டிருக்கும்
உன் விழிகள்.
பல்வரிசை காட்டி நீ சிரிக்கும் அழகு
கண்ணில் நின்று ஆடுதடா

கற்றலில் விளையாட்டில்
வழிகாட்டலில், வழிநடத்தலில்
கைகொடுப்பதில்
எங்கும் உன் செம்மை கண்டேன்

சேமமடு ஆசிரியர் விடுதியில்
எம்மோடிருந்து படித்து
உறங்கிய ஒரு நாள்
உனது இடது உள்ளங்கால் தோலை
எலி அரித்து விட்டுச் போனது
காலை எழுந்தவுடன்
பாயில் இருந்தபடி
உன் காலைக் காட்டியபோது
தேங்காய் அரித்த அடையாளம்…
‘நீ வெள்ளையாய் வருவாய்’ என்றோம்
மறுநாள் ‘அக்காவின் மோதிரம் சூடுகாட்டிச் சுட்டேன்’ என்றாய்

உனக்குக் கிடைக்கும் சுவையான சாப்பாடு
எங்களின் பங்குபோடலுக்குக் கொண்டு வருவாய்
மாலை முழுவதும்
நுங்குக்குலை, பழங்கள் எமக்காகும்
வயல் வெளியும் மஞ்சள் வெயிலும்
குளக்கரையும் உலாவ வைப்பாய்
பல தடவைகளில் நீதான் வழிகாட்டி
வர்ணனையாளன்… எல்லாமே

குளத்தில் குளிக்கும்போது
சின்னமீன்கள்
உடம்பில் கடிக்கும் இதம்காண வைத்துவிட்டு
நீ குத்துக் கரணம் அடிப்பாய்
உன்னோடு சேர்ந்து நாமும் சின்னவர்களாவோம்.

எந்த வேலையும் உனக்கு இலகுவாகும்
ஒரு விளையாட்டுப் போட்டி
‘சேர் வித்தியாசமாக ஏதும் செய்வோம்’
இல்லத்துக்கு ‘ஈபிள் ரவர்’ வடிவம் சொன்னேன்
கண்டவர் வாய் பிளக்க காரியம் செய்தாய்

சரஸ்வதி பூஜை, பரிசளிப்பு விழா
மாணவர் மன்றம், நாடக விழா
எல்லாம் முன்வரிசை நாயகன் நீ
வீட்டாரை உறவென்று ஆக்கினாய்
பேச்சாலும் சிரிப்பாலும் நட்பினைப் பெருக்கினாய்

பள்ளிப் பருவத்தை முழுதாய் அனுபவித்த
முதல் மாணவன் நீயடா

மூன்றரை வருடத்தின் பின்
உன் அம்மாவின் கையால்
மீண்டும் ஒரு தடவை
சாப்பிடும் அன்பு கிடைத்தபோது
என்னருகில் நீ இருந்து
‘சேர் வடிவாச் சாப்பிடுங்கோ’
அந்தச் செல்ல அதட்டல் காதில் கேட்டதடா!

இன்று
எல்லாம் இழந்து வந்த
உன் உறவுகளின் முன்னிருந்து
கதை பயிலத் தொடங்கினேன்.
உன் அத்தானும் அம்மைய்யாவும்
நீயும் இல்லாத
வெறிச்சோடிய வீட்டில்
உன் சிரிப்பினைச் சுமந்து கொண்டு
அக்காவின் பிள்ளைகள்
புன்னகைக்கக் கண்டேன்.

இப்போ உன் சிரித்த முகம் மட்டும்...
உன் அம்மாவின் காய்ந்த விழிநீரின் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
கொடுப்பில் வெற்றிலை வைத்துக் கொண்டு
நடுங்கும் குரலில் கதைக்க
உன் அப்பாவிடம் கண்டேனடா.
ஆவலாய்க் கதைகேட்கும்
உன் அக்காவின் கருவிழிகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
டிரக்டர் சீற்றில் இருந்து
அதட்டிக் கதைசொல்லும்
உன் அண்ணன்மாரிடம் கண்டேனடா
தயங்கித் தயங்கி வேலை செய்யும்
உன் தம்பியின் உருவத்தில் கண்டேனடா

ஆனால்
உன் செல்லக்குட்டி மருமகளிடத்தில் மட்டும்
ஆசை அங்கிள் வருவார் என்று
உன் அன்புக்கு ஏங்கி நிற்கும்
சிரித்த முகத்தை இன்றும் கண்டு கொண்டேன்.

என் அன்பு மாணவனே
நீ தர்ம வேகன் என்பதாலோ
வேகமாகச் சென்றுவிட்டாய்?
11.03.2010
நன்றி - பதிவுகள்
(வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்ற எனது மாணவன் ஐ. தர்மேகன் நினைவாக)

கருத்துகள்

  1. எனது மாணவன் தர்மேகனுக்காய் நண்பர் தீபச்செல்வன் எழுதிய மற்றுமோர் கவிதை 'அந்தச் சிறுவன் திரும்பி வருவான் ' பின்வரும் தளத்தில் உள்ளது.
    http://globaltamilnews.net/tamil_news1.php?nid=21856&cat=9

    பதிலளிநீக்கு
  2. அன்பின் துவாரகன் தர்மேகனுக்காய் எழுதப்பட்ட 'அந்தச் சிறுவன் திரும்பி வருவான் ' என்ற பதிவை 'THE BOY WOULD COME BACK' என லதாராமகிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கிறார்.

    http://edeebam.blogspot.com/2010/03/boy-would-come-back.html

    என்ற எனது ஆங்கிலத்தளத்தில் படிக்க முடியும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012