நவம்பர் 27, 2009

கடைசி இருக்கையில் வந்தமரும் சின்னப்பறவை



----- துவாரகன்

மண்டபத்தின் கடைசி இருக்கையில்
வந்தமர்கிறது ஒரு சின்னப் பறவை

மனிதர்கள் இல்லாத நாற்காலிகளுடன்
அமைதியே வழிந்து ஒழுகும் மண்டபத்தில்
திறந்த கதவினூடாக
வந்தமர்ந்த அந்தப் பறவை
ஒரு மனிதனைப் போலவே
யோசனையில் ஆழ்கிறது.

ஒரு மரக்கிளை
ஒரு வீட்டு முகடு
ஒரு மின்கம்பம்
எல்லாம் இருக்க
மனிதர்களை இழந்த இந்த
மண்டபத்தில் ஏன்தான் வந்தமர்ந்தது?

தன் இனத்திடம் பகிர முடியாது
நெஞ்சை அடைத்து விம்மும்
சஞ்சலமோ?

மனிதர்களை இழந்த
அந்தக் காலியான கடைசி இருக்கையில்
அந்தச் சின்னப்பறவை வந்தமர்கிறது.
உறவுகளை இழந்து தனித்துப் போன
ஒரு சிறுவனைப்போலவே!
261020092229




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக