முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துவாரகனின் நான்கு கவிதைகள்

 

1. அந்தரத்தில் மிதத்தல்

மமதையை,
யுகங்களாகச்
சுமந்துவந்த காலம்
இந்த மனிதர்களின் கைகளில்
சேர்த்திருக்கிறது.

கபடம் நல்ல முகமூடி
அதிகாரம் ஒரு சப்பாத்து
அதற்குத் தெரிவதெல்லாம்
பூச்சிகளும் புற்களும்தான்.

அதிகார போதையில்
வானமும் வசப்படும்
சிட்டாய்க்கூடப் பறக்கலாம்.

பறந்தாலென்ன? அளந்தாலென்ன?
நிற்பதற்கு மண்ணுக்குத்தானே
வரவேண்டும்.

மண் புதைகுழி.
தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும்.
சாம்பல்கூடக் கரைந்துவிடும்.
எதுவுமில்லை எதுவும்.
042024


2. வேர்கள் மறைந்தே இருக்கட்டும்

வேர்கள்
எப்போதும்போல்
மறைந்தே இருக்கட்டும்.
மண்ணின் பிடிமானத்தை விட்டு
அவை வெளியே வரவேண்டாம்.

கிளைகளின்
களிநடனம் பற்றியும்
விருட்சத்தின்
வலிமை பற்றியும்
அவர்கள்
மனங்குளிரப் பேசுவார்கள்.
தங்கள் வேர்களையும்
தேடுவதாகத்தான் கூறுவார்கள்.
அத்தனையும் பசப்பு வார்த்தைகள்.

மண்ணும் பெயல்நீரும்
பொத்திவைத்த
ஆழவோடிய வேர்கள்
வெளியே வரவேண்டாம்.

அவர்களின் குடுவைகளில் இருப்பது
உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல.
உயிர்வாங்கும் சுடுநீர்.
052024


3. ஒரேயொரு கேள்வி

கலகலப்புக் குறையாத கூடு அது.
ஒவ்வொரு அறையின் சுவர்மூலைகளும்
விளக்குக்கரி படிந்த
இனிய காலங்களைத்
திரளாக அப்பியிருந்தன.

தினமும்
திறந்து திறந்து மூடியதால்
ஆணி கழன்றுவிட்ட
நீள்சதுர சூட்கேஸில்
பத்திரப்படுத்தப்பட்டிருந்த
அஞ்சல் அடையாள அட்டைக்
கறுப்பு வெள்ளைப் புகைப்படம்,
நினைவுகளோடு
நிறைந்து வழிந்தது.

அவள் காற்றில் கூந்தல் உலர்த்திய
பொழுதுகள்
அந்தத் தளர்ந்துபோன
முதுமரத்தின் முகத்தில்
இன்னமும்
மின்னிக் கொண்டிருந்தது.

எப்போதாவது ஒருநாள்…
தெருப்படலை திறந்து
புன்னகைக்கும் காலத்தை அழைத்துவருவாள் என்ற
நம்பிக்கையோடு காத்திருந்தவளிடம்
விசாரணையின் முடிவில்
அந்த அதிகாரி
ஒரேயொரு கேள்வி கேட்டான்.

நினைவுத் திரள்…
மரத்திலிருந்து பழுத்துவிழுந்து
மண்ணோடு மண்ணாக
இற்றுப்போன இலையாக
சிதைந்துபோனது.
052024


4. நீ பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டிருக்கிறாய்

நீ நடந்த செம்மண் பாதையும்
உன் தந்தை வியர்வை சிந்தி உழைத்த
வயல்வெளியும்
உன் நினைவுத் திசுக்களில் இருந்து
அகற்றப்பட்டிருக்கின்றன

மண்சட்டியில்
முளைக்கீரைக் கறியாக்கி
திரளைச் சோறூட்டிய
உன் பாட்டியை
நினைவில்லை என்கிறாய்

உன் பெரியமாமன்,
சிவந்த மண்குழைத்துக் கட்டித்தந்த
மண்சுவர் வீடு
இது இல்லை என்கிறாய்.

உலக வரைபடத்தை விரித்து
விண்ணாணம் பேசும் உன்னால்,
உனது தெருவில் இருக்கும்
விஷகடி வைத்தியரைக்கூடத்
தெரிந்துகொள்ள முடியவில்லை.

உன் நரம்புமண்டலத்திலிருந்து
ஓர் இழை
மிகப் பத்திரமாகப்
பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது
நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்த
உன் வேர்
ஆழத்தில்…
மிகமிக ஆழத்தில்…
புதைக்கப்பட்டிருக்கிறது.

இன்று நீ புதிய மனிதன்!
வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த
பறக்கும்தட்டு
உன்னை
இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறதுபோலும்.
05/2024

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

நகரம்

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிறார்கள். கடமைக்கு விரைந்தவன் கூவிக்கூவி விற்ற கடதாசிப் பூக்களை விலைபேசிக் கொண்டிருக்கிறான். கழுத்துப்பட்டி சப்பாத்து அட்டைகள் பத்திரங்களுடன் பூவரசவேலிக்குள் ஓடாகிப் போன மனிதர்களை ஏமாற்றப் புறப்படுகிறார்கள் இன்னுஞ்சிலர். மூச்செடுக்க முட்டுப்படுபவனிடம் வைத்தியசாலை வாசலில் நின்று பிச்சை கேட்கிறான் ஒருத்தன். பெற்றவரும் மற்றவரும் நோயில் செத்துக்கொண்டிருக்க கண்ணை மின்ன மின்ன அதிசயப் பிராணிகளென படம் பிடிக்கிறார்கள் வேற்றுக்கிரகத்தால் நேற்று வந்த மனிதர்கள். தனியே சிரிப்பவர்களும் வீதியில் கனாக்காண்பவர்களும் கண்ணாமூச்சி விளையாடுபவர்களும் கண்டுபிடிக்கப்படுபவர்களும் இன்னும் நவீன பைத்தியக்காரராய் உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும் செல்லப்பிராணிகளும் க...