முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூய்மையும் தூமையும்



-துவாரகன்

இப்பொழுதெல்லாம்
புனிதம் பற்றிப் பேசுகிறாய்
தூசுகளால் ஆன இந்த உலகு
தூ(ய்)மை நிறைந்ததுதான்

பட்டுப்போன மரக்கொட்டுக்கூட
உனக்குப் புனிதமென்றால்
எனக்கென்ன
இருந்து விட்டுப்போகட்டுமே!
குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்
என் வாழ்வழித்து
புதிதுபுதிதாய் வரைகிறாயே
இதை என்னவென்பது?

முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்
நாற்றத்தை மறைக்க
வாசனைத் திரவியம் பூசுவதும்
பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட
இருந்து விட்டுப்போகட்டும்.

தொப்புட்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை தீட்டாக இருக்கலாம்

உன் வீட்டுப் பூச்சாடியும்
நாய்க்குட்டியும்
உனக்குப் புனிதமென்றால்
என் பூர்வீகமும் நாமமும்
என்ன தூமைச் சீலையா?
03/2011
நன்றி - பதிவுகள்/

கருத்துகள்

  1. கவிதை நன்று.கருத்துக்கு பலகருத்து எடுக்கலாம்

    பதிலளிநீக்கு
  2. வாசனைப் பூச்சும்
    வண்ண மலர் செண்டுகளும்
    உள்ளத்துத் தீட்டை
    மறைக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  3. மறைக்கமுடியாதுதான். ஆனால் 'பூர்வீகமும் நாமமும்' தீட்டெனக் கூறுபவனிடத்தில் இவற்றை பெரிதுபடுத்திப் பயனில்லைத்தானே!

    பதிலளிநீக்கு
  4. ரவி அண்ணா சொன்னது போல் உன்னிப்பாகப் படிக்கும் போது இக் கவிதை பல தளங்களுக்குச் செல்கின்றது. முகப் பூச்சென்றதும் எனக்கு ஓசோனில் விழும் ஓட்டைகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிமலன்

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் எடுத்துக்கொண்ட வார்த்தைகளின் அர்த்தத்தில் கவிதை அர்த்தமான கவிதைதான். பட்டுப்போன மரக்கொட்டு எதன் உருவகம் என்பது எனக்குப்புரியவில்லை. இன்னும் தூமை என்னும் வார்த்தைபற்றிச்சொல்ல நிறைய இருக்கிறது. நான் தூமை இதழுக்கு எழுதிய அஞ்சலின் பிரதியை இணத்திவிடுகிறேனே.

    = தூமம் =

    சொன்னது யாரென்று கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும், நம்புங்கள் எங்கள் கவிப்பேரரசுதான் சொல்கிறார் தூமச்சீலை என்பது தூய்மைச்சேலை என்பதன் திரிபாம்.
    (கள்ளிக்காட்டு இதிகாசம், பக்கம் -121) அதாவது தூமச்சேலையில் இருக்கும் அழுக்கு அல்லது உடைந்துவெளியேறிய பெண் முட்டைகளின் சிதிலமும் குருதியும் ஒருபோதும் தூமம் என வழங்கப்படவில்லை எனவும் கொள்ளலாம். காரணம் தூமம் அல்லது தூமை என்கிற சொல் இலக்கியங்களிலோ காவியங்களிலோ இதிகாசங்களிலோ எங்கும் பதிவாகியிருப்பதாகத் தெரியவில்லை. வேதியியலில் தூமம் என்றால் வாசனைத்திரவியம் அல்லது Fumes என்றே பொருள்படும். பெண்களைப்பழித்த சித்தர்களோ , பட்டினத்தார்கூட பீறுமலமும் குருதியும் வழியும் பெருங்குழியினின்று ஏறும் வழி கண்டிலேன் என்றாரே தவிர தூமம் என்கிற வார்த்தையைப் பிரயோகிக்கவில்லை என்பதுவும் கவனிக்கப்பாலது.

    பதிலளிநீக்கு
  7. 'பட்டுப்போன மரக்கொட்டு' என்னைப்பொறுத்தவரை மிகச் சாதாரண பொருள். அதைப்போன்றவற்றை தூக்கி வைத்துக் 'கொண்டாடுதல்' எமது தற்போதைய சூழலில் மிக அதிகம்.

    மேலும் தூமை பற்றிக் குறிப்பிட்டீர்கள். தர்மினியின் தளம் ஏற்கனவே வாசித்து வருகிறேன். உங்கள் அனுபவ முதிர்ச்சியால் வழிப்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காடு

-துவாரகன்- அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து வைத்திருக்கும் அழகிய உலகம் பொய்யும் கபடமும் இந்தக் காடுகளிடம் இல்லை சிறகுவிரித்து நுழைய நுழைய தன் கரம் நீட்டிக் காப்பாற்றும். இயற்கையிலும் வாழ்க்கையிலும் மோகம் கொண்ட மனிதன் காடுகளைக் கண்டடைந்தான். பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு காடுகளில்தான் மனிதன் வேட்டையாடக் கற்றுக் கொண்டான் காடுகளில்தான் மனிதன் போராடக் கற்றுக் கொண்டான் காடுகளில் இருந்துதான் மனிதன் நாடுகளைப் பிடித்தான். வீரர்களைக் காக்கும் விரிந்த உலகானது காடு. நாகரீக மனிதனோ, காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான். காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான். ஆனாலும், காடுகளே அற்புதங்கள் காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள் காடுகளே விடுதலையின் வெற்றிகள் 051220100655

உறைந்துபோன கண்கள்

-துவாரகன் சொற்கள் செத்துப்போன கணங்களில் கைகளும் கால்களும் உறைந்தன. கண்கள் உயிரின் பாஷைகளாயின. வெளிச்சத்தில் குறுகவும் அதிசயத்தில் விரியவும் பழக்கப்பட்ட கண்கள் அவை பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள் உயிர்கொண்ட கணத்தில்... மண்ணும் கல்லும் சாந்தும் குழைத்தெழுந்த சுவர்களுக்கு ஈரத்தோடு உயிர்பிறந்தபோது, மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின. எத்தனை ஜோடிக்கண்கள் பேசின எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன. வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது. கருணையை கையேந்தி இரந்துகொண்டே பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும் ஆட்டின் குருதியென உறைந்திருந்தன. சுருட்டுப்புகையோடு ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும் 'சொக்கன்அண்ணா' ஒருநாள் மாலைக்கருக்கலில் பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது கண்கள் மட்டும் விழிந்தபடியே உறைந்திருந்தன. சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை. குப்பையில் தூக்கிவீசப்பட்ட ஒரு பொம்மையைப் போலவே! 04/2012 ---

யாரிடம் விற்றுத் தீர்ப்பது?

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம் ஈந்தனர் எங்கள் பாரிகள். கொடிசுற்றிப் பிறந்த பிள்ளை குலத்துக்காகாது என்றே கோயிலெல்லாம் சுற்றிப் பிணி நீக்கினாள் எங்கள் பாட்டி. வீட்டில் வளர்த்த மாட்டுக்கு குண்டிப்பக்கம் நாகபடம் உடனே விற்றுவிடு என்றார் அப்பா. உடம்பெல்லாம் நச்சுக்கொடி படரத் திரியும் எங்கள் தனயன்மாரை நாங்கள் யாரிடம் விற்றுத்தீர்ப்பது? கிழவியைத் துகிலுரிந்து பார்ப்பதும் குழந்தையைப் பிரித்துக் கிழிப்பதும் குமரியைச் சிதைத்துக் கொல்வதும் இன்னும்... அப்பனையும் அண்ணனையும் அடித்துக் கொல்வதும் எந்தக் குலத்திலையா எங்களுக்குச் சொல்லித்தந்தார்? நாங்கள் நச்சுக்கொடிகளோடு வாழ்கிறோம். இந்த உலகத்தின் அதிமானிடர் என்று சொல்லிக்கொண்டே. 05/2012