நவம்பர் 19, 2011

சாம்பற்பூச்சிகளென



                            -துவாரகன்
சிரி
அணை
சிதை
ஊரைக்கூட்டு
உனதென்று சொல்

இரத்த நாளம்
மூளைத்திசு
எங்கும்
மூட்டைப் பூச்சியாய்
களிம்பாய் ஒட்டு.

துலா மிதித்து
வந்தாரை வாழவைத்து
வளர்ந்த சாதி
வாய் கிழியச் சொல்.

சுட்டுவிரல்
நாற்காலி
உச்சக்குரலோடு சேர்ந்து
நீயும் விழுங்கு
சாம்பற்பூச்சிகளென!
11/2011

நவம்பர் 07, 2011

என் கிராமத்திற்கு வந்துபோன கடலைவியாபாரி




-துவாரகன்

நகரச் சந்துகளில்
கூவிக்கூவி விற்ற
கடலை வியாபாரி
ஒருநாள்
என் சின்னக் கிராமத்திற்கு வந்துபோனான்

மழை பெய்து ஓய்ந்திருந்த
மாலைப்பொழுதில்
சிறுவர்கள் மாபிள் அடித்து
விளையாடிக் கொண்டிருந்தனர்.

பெரியவர்கள் கோவிலில்
கடவுளைக் கண்டு
ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தனர்.

குழந்தைகளின் மூச்சிலும்
சிறுவர்களின் பேச்சிலும்
ஊர் உயிர்த்திருந்தபோது
ஊரின் ஒதுக்குப் புறத்தால்
வந்துபோனான் கடலை வியாபாரி

கடவுளைத் தூக்கி
வீதியுலாச் செல்ல
இளைஞர்களைத் தேடியபோது
அவர்கள்
யாருக்கும் தெரியாமல்
கடலை கொறித்துக் கொண்டிருந்தனர்.

அழகான கிராமத்தின்
குச்சொழுங்கைகள் எல்லாம்
அசிங்கமாயின
பகிர்ந்துண்டவர்களின் எச்சத்தால்.
11/2011
நன்றி - பதிவுகள்,tamilauthors