1. அந்தரத்தில் மிதத்தல் மமதையை, யுகங்களாகச் சுமந்துவந்த காலம் இந்த மனிதர்களின் கைகளில் சேர்த்திருக்கிறது. கபடம் நல்ல முகமூடி அதிகாரம் ஒரு சப்பாத்து அதற்குத் தெரிவதெல்லாம் பூச்சிகளும் புற்களும்தான். அதிகார போதையில் வானமும் வசப்படும் சிட்டாய்க்கூடப் பறக்கலாம். பறந்தாலென்ன? அளந்தாலென்ன? நிற்பதற்கு மண்ணுக்குத்தானே வரவேண்டும். மண் புதைகுழி. தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும். சாம்பல்கூடக் கரைந்துவிடும். எதுவுமில்லை எதுவும். 042024 2. வேர்கள் மறைந்தே இருக்கட்டும் வேர்கள் எப்போதும்போல் மறைந்தே இருக்கட்டும். மண்ணின் பிடிமானத்தை விட்டு அவை வெளியே வரவேண்டாம். கிளைகளின் களிநடனம் பற்றியும் விருட்சத்தின் வலிமை பற்றியும் அவர்கள் மனங்குளிரப் பேசுவார்கள். தங்கள் வேர்களையும் தேடுவதாகத்தான் கூறுவார்கள். அத்தனையும் பசப்பு வார்த்தைகள். மண்ணும் பெயல்நீரும் பொத்திவைத்த ஆழவோடிய வேர்கள் வெளியே வரவேண்டாம். அவர்களின் குடுவைகளில் இருப்பது உயிர்வளர்க்கும் குளிர்நீரல்ல. உயிர்வாங்கும் சுடுநீர். 052024 3. ஒரேயொரு கேள்வி கலகலப்புக் குறையாத கூடு அது. ஒவ்வொரு அறையின் சுவர்மூலைகளும் விளக்குக்கரி ...
துவாரகனின் வலைப்பதிவு