ஜூலை 20, 2011

தலைப்பில்லாத கவிதை -1



-துவாரகன்

குளித்த ஈரம் துவட்ட நேரமில்லை.
காற்சட்டை காயும்முன்னே அணிந்து கொள்கிறேன்
சாப்பாடும்
ஆலயப் பூஜைபோல் ஆறுவேளையாயிற்று

அப்புச்சியின் உலகில்
பழஞ்சோற்றுடன்
வயிறு குளிரக் கஞ்சி.
பின்னொரு காலம்
வெள்ளைப் பிட்டுடன்
ருசியான மிளகாய்ச் சம்பல்.
அவசரக் கோமாளிகளின் கையில்
‘கேக்’கும் 'மைலோ' பாலும்.

நினைவுகளின் துகிலுரிப்பு
நிலைப்பவற்றின் நிலையழிப்பு
என்னையும் தொலைக்கிறது

என் கண்ணிலும்
மூளையிலும்
மூக்கின் வழியிலும்
பாட்டனின் கறுப்பு
இன்னும் மீதியாய் ஒட்டியுள்ளது.

அவசரமாகக் கண்ட இடமெல்லாம்
குந்தி எழும்பியதில்
என் பின்பக்கம் மட்டும்
கொஞ்சம் கறுத்துப் போயுள்ளது.

நண்பரே
சந்தேகமெனில்
காட்டட்டுமா?

யூலை/2011
நன்றி-tamilauthors.com
(குறிப்பு - கவிஞர் சோ. ப வின் மொழிபெயர்ப்புக் கவிதையொன்று ஞாபகம் வருகிறது)

ஜூலை 08, 2011

தமிழ்ப்புலமையின் குறியீடு நீ


ழத்து இலக்கிய வானின் விடிவெள்ளி நீ
தமிழ்ப் புலமையின் குறியீடு நீ
சொல்லின் வீச்சும்
அறிவின் துலக்கமும்
தமிழ் கூறும் உலகெங்கும்
உன்னை நினைக்க வைத்தது.

விமர்சன வீச்சினால் ஈழத்தமிழை
உலகெங்கும் எடுத்துச் சென்றாய் நீ
கணைகள் பெற்றாலும்
சளைக்காது தொடர்ந்தாய் நீ.

யாழ் பல்கலையில்
இறுதியாய்
உன் தமிழ்ப்புலமையின் கப்பிப்பால்
குடித்த பாலகர்களில் ஒருவனாய்
அன்று நானும்
உன் அருகில் இருந்தேன் ஐயா.
அதனால் இருவிழி நீருடன்
உலகெங்கும் பரந்த
உன் மாணவசீடர்களில்
ஒருவனாய் நின்று
அஞ்சலித்தேன் ஐயா!

ஈழத்து இலக்கிய வானின்
விடிவெள்ளியாய் என்றும் ஒளிர்வாய்
தமிழ்ப் புலமையின் குறியீடாய்
நீ இன்னும் வாழ்வாய்

-சு. குணேஸ்வரன் (துவாரகன்)