ஆகஸ்ட் 15, 2021

காலச்சுழல்

-       துவாரகன்














முன்னோர்

புண்ணியத்தை அறுவடை செய்யக்

கற்றுத் தந்தனர்.

நேர்மையைக் கற்றுத் தந்தனர்.

நாங்களோ,

பாவத்தை அறுவடை

செய்து கொண்டிருக்கிறோம்.

 

நல்ல காற்றைச் சுவாசிக்க

மறந்து போனோம்.

சங்கூர்ந்த நிலங்களை

சாம்பல் மேடாக்கினோம்.  

கைவீசி நடந்த கரங்களுக்கு

விலங்குகளை இட்டோம்.

உண்மையையும் நீதியையும் பிணைத்து

சவாரி மாடெனச் சாய்த்தோம்.

 

சின்னச் சிட்டுக் குருவிக்கு

ஒரு சிறாங்கைத் தானியத்தையேனும்

விட்டுவைக்க மறந்து போனோம்.

 

கவனமாகப்

பொலித்தீன் பையினால் சுற்றப்பட்ட

உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும்

காலச்சுழலை

யார்தான் விரும்பிக் கேட்டார்கள்?

 

வீடு திரும்பிவிடுவோம் என்ற

நினைவுடனேயே

வைத்தியசாலை வாசலில்

கால் பதிக்கிறோம்.

 

அந்த நம்பிக்கையேனும்

நிச்சயமாக

மீதியாக இருக்கட்டும்.

11082021

---

 நன்றி :  பதிவுகள்

ஆகஸ்ட் 06, 2021

கருணையாளரின் தும்புத்தடி

 


-       துவாரகன்

அவள் பூனை வளர்ப்பதை

எப்போதும் விரும்புவதில்லை.

கண்ட கண்ட இடமெல்லாம் மயிர் உதிர்த்தும்.

திண்ட மிச்சத்தையும் வீட்டுக்குக் கொண்டு வரும்.

கட்டிலின் கீழே

கடித்துப் பாதியான ஓணான் தலையொன்றைக்

கண்ட நாள்முதல்

அவள் பூனையை வெறுத்தாள்.

 

பூனை உதிர்த்த மயிரைக்

கூட்டித் தள்ளுவதற்கு

இதுநாள்வரை

நல்ல தும்புத்தடி கிடைக்கவில்லையென்று

நாளும் விடியற்காலையில்

புறுபுறுத்துக் கொண்டேயிருப்பாள்.

 

பொங்கலோடு மடைபோட்டுப் பலியிட்ட

வயற்கோயிற் திருவிழாவில்

காலமெல்லாம் நின்றுழைக்கும்

மிகத் திறமான தும்புத்தடி விற்றார்கள்.

 

 இப்போ

கருணையாளரிடம்

மிகத் திறமான தும்புத்தடிகள் உள்ளன.

அவற்றுள்

ஒன்று கூட்டக்கூடியது.

இன்னொன்று கூட்டிக் கொடுக்கக்கூடியது.

270820211212

ஆகஸ்ட் 01, 2021

சாந்தனின் எழுத்துலகம் உரையாடல்

 சாந்தனின் எழுத்துலகம் தொடர்பாக இலக்கிய வெளியின் ஏற்பாட்டில் நிகழ்ந்த உரையாடலில் "சாந்தனின் சிறுகதைகள்" தொடர்பாக கலாநிதி சு. குணேஸ்வரன் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி. https://www.youtube.com/watch?v=P5Ak_xFQ8hc&t=153s