ஜூன் 03, 2023

இது யாருடைய வீடு

 


- துவாரகன்
நினைவோரத்தில் தேங்கிய
கனவுகளைத் தூக்கிச் செல்கிறான்.
வளையம் உருட்டிவிளையாடிய ஒழுங்கை
கலங்கலாயிருக்கிறது.
புதிய பாதைகள் முளைத்திருக்கின்றன.
சிதைந்த வீடுகளைப்போல் முதியமுகங்களில் ஓவியத்தின் ரேகைகள்.
சந்தையின் இரைச்சலும்
சின்னக்கால்களால் நடந்த ஆரம்பப்பள்ளியும்
தரவையும்
கோயில்பொங்கலும்
கடல்மீனாகத் துள்ளியெழுகின்றன.
ஐந்து தோடம்பழ மிட்டாய்களை
நீண்டநேரம் உள்ளங்கையில் பொத்திவைத்த
ஈரலிப்பு.
தொலைந்துபோன காலங்களின் குளிர்மை
நெஞ்சை நிறைக்கிறது.
பாதை மருங்கில் அலங்கோலமாகக் கிடந்த
வேலியின் ஊடே
ஒரு வேற்றுமனிதனைப்போல
அந்த வீட்டைப் பார்க்கிறான்.
'வீட்டுக்கு முன்னால
மதில் இருந்ததென்று அக்கா சொன்னவா!'
வார்த்தைகள் குமிழிடுகின்றன.
மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டே சொல்கிறான்.
'இது எங்கட வீடுதானோ?'
நினைவு,
கையிலிருந்து வீழ்ந்த
கண்ணாடியாகச்
சிதறுகிறது.
01062023

கதிரையதிகாரம்


- துவாரகன்
அதிகாரம் என்ன செய்யும்?
மண்டியிட வைக்கும்
மானிடத்தைக் கொல்லும்
அதிகாரம் என்ன செய்யும்?
குதிக்கால் உயர்த்திப் பேசும்
சுட்டுவிரல் காட்டி அடக்கும்
சாட்டையின் கைமாற்றம்
நுகத்தடியில் மாட்டப்படும்
தோள்களுக்கு
வானவில் வண்ணத்தைத்
தரப்போவதில்லை.
வானத்தில் பறந்துகொண்டிருக்கும்
காக்கையை
ஆராய்ந்துகொண்டு
நூறுபேர் நிற்கிறார்கள்.
நூற்றியோராவது ஆளுக்காக
சன்னதங் கொள்கிறது
கதிரையதிகாரம்.

துரோகத்தின் நாவுகள்

 


- துவாரகன்
துரோகத்தின் நாவுகள்
மண்ணில் ஊன்றிய வேர்களைப்போல் மறைந்துள்ளன.
காற்றுக் கைகளை நீட்டி
தாயென முலைதந்து
தாலாட்டிய நல்மரங்களென
எண்ணியிருந்தோம்.
நச்சுமரமாகித் துரத்துகின்றன.
துரோகத்தின் நாவுகள்தான்
சிலுவை சுமக்க வைக்கின்றன.
உணர்வைக் கொல்கின்றன.
சந்தனக் குழம்பு பூசி
நறுமண வார்த்தைகளோடு
உலாவும்
நாவுகளிலிருந்து
நினைவே நீ விலகிவிடு.
மறதியே நீ வாழ்ந்துவிடு.
வேர்களை அறுத்துக்கொண்டு
காற்றில் மிதக்க ஆசைப்படுகிறது
வெள்ளந்தி மனசு.