அக்டோபர் 02, 2009


வீதியைக் கடக்கும் தம்பளப்பூச்சிகள்


-----துவாரகன்

வானத்துக் கதவுடைத்துக் கொட்டிய
பெருமழையில்
வீதிகள் கழுவப்பட்டன.

சேறு வெள்ளம்
நாய் மாடு இறைத்த எச்சங்கள்
எல்லாமே அள்ளுண்டன.
சருகுகள் தடிகள் பெருமழையால்
இழுபட்டன.

மழை பெய்த பின்நாளில்
மண்ணில் மூடுண்ட வித்துக்கள் வெடித்தன.
இளம்பச்சைக் குருத்துக்கள் வெளித்தெரிந்தன
சாணக வண்டுகள் உருண்டு புரண்டன
தம்பளப் பூச்சிகள் ஊர்ந்தன
சரக்கட்டைகள் வீதியைக் கடந்தன


வாரடித்த மண்ணை
மண்வெட்டியால் வழித்தெடுத்தனர் சிலர்
மழை சுத்தப்படுத்திய வெளியில்
கிளித்தட்டு விளையாடினர் சிறுவர்
வீதி அருகில் இருந்து
வெற்றிலை போட்டுத் துப்பினர் பெரியவர்
இது நல்ல மழை என்றனர்

மழையால் வழித்தெடுக்கப்பட்ட எல்லாம்
வீதியால் வழிந்தோடி
பாலங்களுக்கடியில் தேங்கின
குளங்களை நிறைத்தன

எல்லைகள் இழந்த புதிய வீதியை
தம்பளப் பூச்சிகளும்
சரக்கட்டைகளும்
கடந்து செல்கின்றன.
210920092003
நன்றி- கலைமுகம்