டிசம்பர் 19, 2014

படங்காட்டுதல்



- துவாரகன்

தெருவுக்கொரு தியேட்டர்
பொழுதுக்கொரு புதுவரவு
யார் காட்டும் படத்தை முதலில் பார்ப்பது?

பற்களிள் இடுக்குகளில் நரமாமிசம்
கைகளெல்லாம் காய்ந்துபோன கறை
தழும்பு கொண்ட முகமெங்கும் முகப்பூச்சு
புன்னகை முகமென்னும் நினைவோடையில்
தள்ளுவண்டில் சுண்டல்காரன்போல்,
கூவி அழைக்கிறார்கள்.
தகரக்கொட்டகைகளும் தறப்பாள் குடில்களும்
காணாமற்போகும் நாள்வரும் என்று
கூவி அழைக்கிறார்கள்.

நீங்களே நடித்து
நீங்களே இயக்கி
நீங்களே அனுமதிச்சீட்டு எடுத்து
உங்கள் படங்களை
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

மழைவெள்ளம் தேங்கிய
என் வீட்டுமுற்றத்தையும்
சரிந்து கிடக்கும் தகரக் கொட்டகையையும்
நான் சரிப்படுத்தவேண்டும்.
11/2014