நவம்பர் 21, 2012

உடுத்துத்திரியும் எருமைமாடுகள்




- துவாரகன்

நான் எருமைமாடுகளை முன்னரும் கண்டுள்ளேன்
அவை எப்போதும் உடுத்திக் கொண்டதாக அறியவில்லை

புரண்டு படுக்கும் சேற்றுத்தண்ணீர்
வற்றிப்போன நாள்முதல்
எருமைமாடுகள் உடுக்கத் தொடங்கியுள்ளன.

தங்கள் லிங்கம் வெளியே தெரியாதபடி
அம்மணத்தைக் கண்டு
குழந்தைகள் அருவருக்காதபடி
அழகாக உடுக்கின்றன.

பட்டுப்பீதாம்பரத்துக்கும்
சுங்கான் பிடித்து புகை விடுதலுக்கும்
வெளிநாட்டுச் சரக்குகளில் மிதப்பதற்கும்
உடுத்துத் திரியவேண்டும் என்று
கரிக்குருவி
ஒருநாள் சீட்டியடித்துச் சொன்னதாம்.

யாருக்குத் தெரியும்
மனிதர்களின் ஆடைகளைப் பிடுங்கி
எல்லா விலங்குகளுக்கும் விற்றுவிடும் காலம் ஒன்று
எருமைமாடுகளின் புண்ணியத்தில் கிடைக்கவும் கூடும். 
11/2012

2 கருத்துகள்:

  1. chithan prasad

    Nov 21 (2 days ago)

    to me
    நன்று... துவாரகன்! இரசித்தேன்

    yugamayini.blogspot.com

    ---
    athanas jesurasa

    Nov 22 (1 day ago)

    to me
    நண்பருக்கு,
    கருத்து நல்லது ; ஆயினும் இன்னும் நெகிழ்வாக வெளிப்பாடு இருக்கலாம் எனப்படுகிறது!
    மேலும், சுங்கான் என்று வரவேண்டியது சுக்கான் என்றிருப்பதைக் கவனியுங்கள்.
    இவ்வண்ணம்,
    அ. யேசுராசா

    பதிலளிநீக்கு
  2. சித்தன், அ. யேசுராசா ஆகியோருக்கு மிக்க நன்றி. எழுத்துப்பிழை திருத்தியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு