டிசம்பர் 29, 2010

கிரகவாசியும் ஆதிவாசியும்


- துவாரகன்


நெஞ்சடைத்து வரும் ஆற்றாமை
வாய் திறந்து அழுதால் தீருமோ?

கல்லோடு கட்டிக்
கடலில் போட்ட கதையாக
அச்சமும் அவலமும்
எப்படி ஒன்றாய்ச் சேர்ந்தன?

தந்திரமா தன்வினைப்பயனா வரலாறா
தமக்குள் கேட்கிறார்கள்.
எல்லாம் மாயை
ஒரு சித்தனும் கூறுவான்

பிரபஞ்சம் அறிந்து விரிந்தபோது
மானிட வாழ்வு மட்டும்
எப்படிப் பூச்சியமானது?
பறித்துப் பிரித்தெடுத்து
முழுவதும் விழுங்கும்
குரங்குபோல்
வந்த தூதர்களின் மூச்சொலி
இன்னமும் கேட்கிறது.

வழக்காட முடியாத தமிழ்ச்சாதியோ?
என்றான் ஒரு கவிஞன்.
பிரபஞ்சத்தின் வெற்றியில்
தூசாக அடிபட்டுப் போன
மானிட ஜாதி இதுதானா?

வேரெது குரலெது
மரத்தடிப் பிச்சைக்காரன்போல்
கேட்டுக் கொண்டேயிரு!

தட்டில் மட்டும்
அப்பப்போ
சில சில்லறைகள் மட்டும் விழக்கூடும்.
231220101038

டிசம்பர் 20, 2010

சபிக்கப்பட்ட உலகு -1



-துவாரகன்-


மீளவும் பூச்சிகளும் பறவைகளும்
வாழும் உலகு எனக்காகச்
சபிக்கப்பட்டிருக்கிறது

எப்போதாவது ஒருமுறை வரும் வாகனத்தில்
ஒரு பயணத்திற்காகக் காத்திருத்தல்
வழமையாயிற்று

எத்தனை முறைதான் இப்படிச் சறுக்கி விழுவது?

அதிகமாக எல்லா அதிகார வர்க்கத்திற்கும்
மூளைப் பிசகு ஏற்பட்டிருக்க வேண்டும்?

சீறிவரும் வாகனத்தில் இருந்து
கண்ணாடிக் கதவு இறக்கி
சுட்டுவிரல் காட்டவும்
லாபத்தில் பங்குபோடவும்
நேரம் குறித்து வருவார்கள்.
கூடவே முதுகு சொறிய
கொஞ்சம் ஒட்டியிருக்கும்.

பூச்சிகளும் பறவைகளும் மிருகங்களுமே
வாழக்கூடிய வனவாசகத்தில்
பட்டரும் ஏசியும் நெற்வேர்க்கும் பயன்படுத்தலாம்
என ஆலோசனை கூறுகிறார்கள் மூளைகெட்டவர்கள்

மூன்று மணித்தியாலமாக
யாரோ ஒரு நல்லவனின் வருகைக்காக
பாசிபிடித்த மதகு ஒன்றில் குந்தியிருக்கிறேன்

வீதியை வெறிப்பதும்
குரங்குகளின் ஊஞ்சலை ரசிப்பதும்
பறவைகளின் கீச்சிடலும் பழக்கமாயிற்று

மழைபெய்து ஈரமாக்கிய கிரவல் மண்ணில்
மண்புழுக்கள் நெளிவதையும்
வாரடித்து ஓடிக்கொண்டிருக்கும் நீரில்
தத்தளித்துக் கொண்டிருக்கும் எறும்புகளையும்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்

இந்த உலகில் வாழச் சபிக்கப்பட்ட
என்னைப் பார்த்து வாலாட்டிக் கொண்டு
ஒரு கண்டன்கறுவல் வீதியைக் குறுக்கறுக்கிறது
241120100131
*கண்டன்கறுவல் - ஒரு வகைப் பாம்பு

டிசம்பர் 13, 2010

காடு



-துவாரகன்-

அற்புதங்களையும் ரகஷ்யங்களையும் மறைத்து
வைத்திருக்கும் அழகிய உலகம்

பொய்யும் கபடமும்
இந்தக் காடுகளிடம் இல்லை
சிறகுவிரித்து நுழைய நுழைய
தன் கரம் நீட்டிக் காப்பாற்றும்.

இயற்கையிலும் வாழ்க்கையிலும்
மோகம் கொண்ட மனிதன்
காடுகளைக் கண்டடைந்தான்.
பசியோடு வந்தவனுக்குப் பரிமாறியது காடு
ஜீவராசிகளின் சரணாலயம் ஆகியது காடு
உயிர்த்தாதுக்களின் உற்பத்தி மையம் ஆகியது காடு

காடுகளில்தான் மனிதன்
வேட்டையாடக் கற்றுக் கொண்டான்
காடுகளில்தான் மனிதன்
போராடக் கற்றுக் கொண்டான்
காடுகளில் இருந்துதான்
மனிதன் நாடுகளைப் பிடித்தான்.
வீரர்களைக் காக்கும்
விரிந்த உலகானது காடு.

நாகரீக மனிதனோ,
காட்டில் இருந்து வந்தவனை நாடோடி என்றான்.
காட்டைச் சூழ்ச்சிகளின் கூடாரமாக்கினான்.

ஆனாலும், காடுகளே அற்புதங்கள்
காடுகளே ரகஷ்யங்களின் பொக்கிஷங்கள்
காடுகளே விடுதலையின் வெற்றிகள்
051220100655

நவம்பர் 28, 2010

யானெவன் செய்கோ?


-துவாரகன்-

அந்தகாரத்தில் ஒலித்து ஓய்ந்துபோன
அந்த ஈன ஒலி
காற்றில் கலந்து கரைந்து போனது.

மெல்ல மெல்ல
மண்ணிலிருந்து எழுந்து
மரங்களில் தெறித்து
வானத்தில் சென்றடங்கிப் போனது.

எது சாட்சி?

ஒரு மரம்
ஓணான், காகம் குருவி
இன்னும்
நான்கு சுவர்களும் பல்லிகளும் சாட்சி.

அந்த வேப்பமர ஊஞ்சல்
அவள்
காற்றில் கூந்தல் விரித்த
கணங்களையும் இழந்து விட்டது.

சுவருக்கும் பல்லிக்கும்
மரத்துக்கும் ஓணானுக்கும்
கடவுள் பேசும் வரம் கொடுத்தால்,
கட்டுண்ட வெளியில் இருந்து
புதையுண்ட மண்ணில் இருந்து
மூடுண்ட அறையுள் இருந்து
இன்னும் கதைகள் பிறக்கும்.

அன்று இசைவோடு ஏமாந்தாள்
குருகு சாட்சியாக.
இன்று அந்தகாரத்தில் அடங்கிப் போனாள்
பல்லியும் ஓணானும் சாட்சியாக.
171120101150
நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)

நவம்பர் 19, 2010

பாம்புகளுக்கு குழந்தைகள் மீது கருணை பிறந்த கதை


-துவாரகன்-

பாறாங்கற்களிலும் தாழைமரங்களிலும்
தம்மை மறைத்துக் கொண்டிருந்த பாம்புகளுக்கு
இப்போ செட்டை கழற்றும் வயசாச்சு.

கண்டவர் அஞ்சும் கோலங்கள் இட்ட
தம் செட்டையை
குழந்தைகளுடன் குதூகலிக்கும் ஆசையில்
கழற்றிக் கொண்டிருக்கின்றன.

பஞ்சுமிட்டாய்க்காரன் போலவும்
பலூன்காரன் போலவும்
பபூன் போலவும்
குழந்தைகளுக்கு ஆசையூட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பாம்புகள்தான்
எங்கள் வீடுகளில் நுழைந்து
குழந்தைகளைப் பயமுறுத்தியவை.
இந்தப் பாம்புகள்தான்
எங்கள் குழந்தைகளை
நித்திரையில் தீண்டிவிட்டுப் போனவை.
இந்தப் பாம்புகள்தான்
பிள்ளைகளின் பாற்கலயத்தில்
விசத்தைக் கக்கிவிட்டுப் போனவை.

இடறி வீழ்ந்துகிடந்த எங்கள் பிள்ளைகளை
ஓர்ஆட்டுக்குட்டியைப்போல்
இறுக்கி முறித்துக் கொன்றவையும் இவைதான்.

கொடிய விசத்தை
இரட்டை நாவுக்குள் மறைத்து கொண்டு
இராட்டினத்தில் ஏறி
குழந்தைகளுடன் விளையாட ஆசைப்படும் பாம்புகளுக்கு
இப்போ மட்டும்
இந்தக் கருணை எங்கிருந்து பிறந்ததாம்?

குழந்தைகள் பாவம்
அவர்களை விளையாட விட்ட
தாய்மாரும் ஏதுமறியார்

கபடதாரிப் பாம்புகளே
இனியாவது கொஞ்சம் விலகியிருங்கள்.
191020101207
நன்றி- காற்றுவெளி (மின்னிதழ் டிசம்பர்)

அக்டோபர் 31, 2010

அப்போது வானம் எவ்வளவு அழகாக இருந்தது



-துவாரகன்

என் அம்மம்மாவின் உலகத்தில்
வானம் எவ்வளவு அழகாக இருந்தது.

முற்றத்தில் இருத்தி
திரளைச்சோறு குழைத்துத் தந்த ஞாபகம்.

எப்போதும் ஒரு நார்க்கடகத்துடன்
நடந்து வருவாள்.
கறிக்குக் கீரை
சாப்பிடப் பழங்கள்
மடியில் எங்களுக்காக ஒளித்துக்கொண்டு வந்த
பணியாரங்கள்.
முதல்நாள் இருமியதைக் கண்டு
மொசுமொசுக்கையுடன் ‘உறெட்டி’யும் தட்டித் தருவாள்
தோடம்பழ மிட்டாய்
அவளுக்கு மிகப் பிடிக்கும்

தங்கை ‘புஸ்பா’வின் பெயர்
அவள் வாயில் வராதெனத் தெரிந்தும்
சகோதரர் நாம், சொல்லுமாறு அடம்பிடிப்போம்

சாதிச்செருக்கின் மிச்ச வடுக்களையும்
தன் குறுக்குக்கட்டில் தழும்புகளாய்ச்
சுமந்து கொண்டிருந்தாள்.

எண்பத்தேழில் எங்கள் வீடெரித்தவனும்
அதன் பின் தலைப்பாகையுடன் வந்தவனும்
எங்கள் கூடுகளைச் சிதைத்துவிட்டுச் சென்றார்கள்
தோட்டம்… வீடு…
ஆடு…மாடு…
பேரப்பிள்ளைகள் என்ற
உலகத்தில் வாழ்ந்த அந்த ஜீவன்கள்
நோயுடன் நினைந்து நினைந்து செத்துப் போயினர்.

ஞாபகமாய் இருந்த
ஒரேயொரு அடையாள அட்டைப் படத்தையும்
பெருப்பிப்பதற்காக
ஒரு ஸ்ருடியோவில் கொடுத்து வைத்திருந்தேன்.
திரும்பியபோது அதுவும் முகாமாக இருந்தது.

வருடத்தில் ஒருநாள்
அம்மா படைக்கும்போது
‘இது அம்மம்மாவுக்கு’ என்பாள்

திரளைச் சோறு ஊட்டி
எம்மை வளர்த்த
அந்தக் கணங்கள்
எங்கள் வாழ்வின் பொற்காலங்கள்.
அதிகாரமும் ஆணவமும் வந்து
எல்லாவற்றையும் அள்ளிச் சென்றுவிட்டுவிட்டது.

அப்போது
வானம் எவ்வளவு அழகாக இருந்தது.
071020101052

அக்டோபர் 10, 2010

வெள்ளாடுகளின் பயணம்


-துவாரகன்

ஆட்டுக் கட்டையை விட்டு
எல்லா வெள்ளாடுகளும்
வெளியேறி விட்டன.
கண்ட இடமெல்லாம் வாய்வைக்கும் என்று
என் அம்மா
ஒரு போதும்
வெள்ளாடுகளை வாங்கி வளர்ப்பதில்லை.

இப்போ அவை
பட்டுப்பீதாம்பரம் போர்த்திக் கொண்டு
ஊர் சுற்றுகின்றன.

சிதைந்துபோன கொட்டில்களில்
தூங்கி வழிவனவெல்லாம்
பறட்டைகளும் கறுப்புகளும்
கொம்பு முளைக்காத குட்டிகளும்
எனக் கூறிக்கொள்கின்றன.

தம்மைச் சுற்றிய
எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கும்
விடுப்புப் பார்ப்பதற்கும்
தம் வீட்டுத்தாயரின் தாவணிகளைப்
பங்குபோட்டுக் கொண்டு
எஜமானன் போல் வருகின்றன.

பட்டுப்பீதாம்பரமும்
ஆரவாரமும்
நிலையானது என்று
இதுவரை யாரும் சொல்லவில்லையே!

ஒருவாய்ச் சோற்றுக்கு அல்லாடுபவன்
கம்பிமீது நின்றாடும் நிலையில்
எங்கள் ஆடுகள்.
210920102015
---------
நன்றி- vaarppu.com , காற்றுவெளி (மின்னிதழ்)

அக்டோபர் 02, 2010

பைத்தியக்காரர்களின் உலகம்


-துவாரகன்

இந்த உலகமே
பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது.

மனிதர்களை ஆட்டுவிக்கும்
அதிகாரிகளும் ஆயுததாரிகளும்
ஆகச் சிறந்த பைத்தியக்காரர்கள்.

பணத்திற்கும் பகட்டுக்கும்
ஒரு கூட்டம் எப்போதும் பைத்தியமாக அலைகிறது.

இச்சைக்காகக் கட்டிய கச்சையை
இழக்கத் தயாராயிருக்கிறார்கள்
காணுமிடமெல்லாம் பைத்தியங்கள்.

எல்லாம் இழந்தபின்
யாரோ ஒரு நல்லவனிடம்
கடன்வாங்கிக் கொண்டுவந்த
மூவாயிரத்து நானூறு ரூபாவை
பிரயாணத்தில் யாரோ களவாடிவிட்டதாக
நாடி நரம்பு தளர்ந்து போய்
கண்கலக்கிக் கூறினானே ஒரு முதியவன்;
அந்தக் களவாணியும் ஒரு பைத்தியம்தான்.

நான் நடந்து செல்லும்
ஒற்றையடிப்பாதையில்
உடல் தளர்ந்து
ஒட்டடைக் குடிலில் இருந்து
ஆசையாய்க் கதைகேட்கும்
இன்னொரு முதியவளின் கண்களில்
ஒளிந்திருக்கும் அன்பைக் கண்டேன் .

எந்தக் கபடமும் அவளிடமில்லை.
அவளைப் பைத்தியம் என விரட்டும்
என்னைச் சுற்றிய உலகத்தில் இருக்கும்
எல்லாருமே பைத்தியங்கள்தான்

இப்போ நான் செய்ய வேண்டியதெல்லாம்
இந்தப் பைத்தியக்கார உலகிடம் இருந்து
என் குழந்தைகளைக்
காப்பாற்றிக் கொள்வது மட்டுமே!
200920102244
நன்றி - திண்ணை, காற்றுவெளி

செப்டம்பர் 15, 2010

யாருக்குத் தெரியும்?



-துவாரகன்

இவ்வளவும் நடந்த பிறகும்
எனது வீடு இருந்த வீதி இருக்கிறது
அப்பு துலாக்கோலுக்குப் போட்ட
பெரிய கல்லு இருக்கிறது
ஆனால் அவளின் உதிரப்பூ மட்டும் இல்லை.

யாருக்கும் தெரியாத ஆற்றில் மிதந்து கிடந்தாயோ
உலகத்துக் கடலில் மூழ்கித்தான் போனாயோ
கடக்கும் போது பனைவெளிகளில் செத்துப்போனாயோ
நாய்கள் இழுத்து இழுத்துச்
சிதைத்துப்போட்ட சடலமாய் ஆனாயோ
சுட்டுத்தள்ளியவன் உருத்தெரியாமல் எரித்துவிட்டுப் போனானோ
யாருக்குத் தெரியும்?

இன்று எல்லோரும் உன்னை மறந்து விட்டார்கள்
தன் மடியில் வைத்துப் பாலூட்டியவள்
விறைத்துப்போன கற்சிலையாயத் தவமிருக்கிறாள்

அதிஷ்டவசமாக
நீ, அவள் முன்னால் வந்து
சிரித்துக் கொண்டிருக்கும்
அந்தக் கணங்களுக்காக
இன்னமும் உயிரோடிருக்கிறாள்.
020920102013
நன்றி - காற்றுவெளி

ஆகஸ்ட் 18, 2010

விசப்பாம்புகளின் உலகத்தில் வாழ்தல்


-துவாரகன்-

எப்போதும்
தீண்டுவதற்குத் தயாராகத் தலையுயர்த்திய
பாம்புகளின் உலகத்தில்
வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம்.

சதா நாவை நீட்டிக் கொண்டு
புற்றிலும் பற்றை மறைவிலும்
ஆட்களற்ற வெளிகளிலும்
தருணம் பார்த்துக் காத்திருக்கின்றன.

குறிவிறைத்து அலையும் குழுவன்மாடுபோல்
கூட்டுக் கலவியில் களித்திடத் துடிக்கும்
தெருநாய்கள்போல் அலைகின்றன.

பெருந்தெருக்களில்
தம் விஷப்பற்களைக் காட்டி இளிக்கின்றன.
நஞ்சுப் பையை
வாயில் ஒளித்து வைத்துக் கொண்டு
எங்கள் இருக்கையையும் படுக்கையையும்
பங்கு கேட்கின்றன.

பக்கத்தில் புற்றிருந்தும்
கொல்வதற்குத் தடியிருந்தும்
பாம்புக்குப் பால்வார்க்கும் உத்தமர்களோடு
ஒன்றும் இயலாத குஷ்டரோகிகளாக
சுற்றியிருக்கின்றனர் மனிதர்.

இது பாம்புகளின் உலகம்
அதில் நாங்கள் வாழச் சபிக்கப்பட்டிருக்கிறோம்.
160820102225

ஜூலை 17, 2010

உன் தந்தையின் கச்சை நெடி உன்னிலும் வீசுகிறது



-துவாரகன்-

நாற்றம் கொண்ட வாயுடன்
அலையும் அற்பனே
உன் பாவத்தை கழுவ
என் கிணற்று நீர் கூட
அனுமதிக்காது.
அதற்குள் புனித நீரா தேடுகிறாய்

என் உடைவாள்
என் கைப்பை
நான் படுக்கும் சாக்குக் கட்டில்
குந்தியிருக்கும் திண்ணை
எல்லாம் தேடி விட்டாய்

என் ஆச்சியும் அப்புவும்
கால்நீட்டிக் கதை பயின்ற முற்றம் இது
கழிசடையே
என் மூத்திரக் கோடிகூட
உனக்கு உரியதல்ல

உன் தந்தையின் கச்சை நெடி
உன்னில்
இன்னும் பலமாகத்தான் வீசுகிறது.
160720101050

ஜூன் 01, 2010

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?



-துவாரகன்

மூன்று மரக்கம்புகளும்
பிளாஸ்ரிக் விரிப்பும்
கிடைத்தாகி விட்டது
மீளவும் ஒரு கூடாரம் தயார்.

பொதிகளைக் கிளறி
தங்குவோர் பெயரைக் கேட்கும் காவற்காரனே
ஆக மிஞ்சி
எங்களிடம் என்ன இருக்கப் போகிறது?

தண்ணீர் பிடித்துக் கொள்ள
ஒரு பிளாஸ்ரிக் குடுவை
பிள்ளைகளோடு படுத்துறங்க
இரண்டு பாய்கள்
அலுமினியப் பாத்திரங்களோடு கோப்பைகள்
கூடவே துணிமூடைகள்

இளைய பிள்ளையின் வயிற்றுப் பகுதியில்
சிவப்புக் கொப்புளங்கள் தெரிகின்றன
மூத்த பிள்ளையின் முகமெல்லாம் வீங்கி வடிகிறது
காய்ந்து போன விழிகளோடு
பார்த்துக் கொண்டிருக்கிறாள் மனைவி

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களெனில்
இந்தக் கூடாரத்தை விட்டு
எங்கள் வீட்டுக்குப் போகக் கூடும்.
இல்லையெனில்
என் பிள்ளைக்கும்
பிள்ளையின் பிள்ளைக்கும்
இதுவே முதுசமாகலாம்.

வயிற்றோட்டமும் சளியும்
பிள்ளைகளின் பரம்பரைச் சொத்தாகலாம்
வெடித்துச் செதிலாகிப் போன
என் கால்களையும் கைகளையும்
நான் சொறிந்து கொண்டிருக்கலாம்
என் அழகான மனைவி
கால்கள் சூம்பி
மூப்பும் பிணியும் கொண்ட மூதாட்டியாகலாம்
நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?

கனவான்களும் ஆட்சியாளர்களும்
கோட்டுடன் கோவைகளைச் சுமந்து கொண்டு
தம் கழுத்துப் பட்டியை இறுக்கியபடி
விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் வாழ்வை எங்களிடம் தருவதற்காக

நாங்கள் அதிஷ்டம் உள்ளவர்களா?
020520100145

மே 16, 2010

மே 17


பூவும் பிஞ்சும்
காயும் கனியும்
வேரும் விழுதுமாக
அழிக்கப்பட்ட
எங்கள் உடன் பிறப்புக்களின்
நினைவுகளுக்கு...

ஏப்ரல் 08, 2010

பல் ஈறுகளில் நெளியும் புழுக்கள்

-----துவாரகன்

எப்போதும் ஆவென்றபடி கிடக்கும்
உன் வாயிலிருந்து
புழுக்கள் நெளிவதை
நானும் கண்டு கொண்டேன்.

நூற்றாண்டுகளுக்கு முன்
உன் தந்தையர் கடித்துச் சுவைத்த
நரமாமிசத்தின் மீதியிலிருந்து
உனக்கான புழுக்கள் உருப்பெற்றிருக்கின்றன.

அழுகி வடியும் துர்முகத்தினூடே
புண்களால் வழிந்தொழுகும் நிணத்தினூடே
கற்றை கற்றையாய் எட்டிப் பார்க்கின்றன
பற்களிலிருந்து வெளிப்படும் புழுக்கள்

செத்துப்போன மிருகங்களின் உடல்களிலும்
அழுகிப்போன பண்டங்களிலும்
மூக்கைச் சுழிக்க வைக்கும் மலத்திலும்
நான் கண்டு கொண்ட நெளியும் புழுக்களை
இன்று உன் பல் ஈறுகளிலும்
கண்டு கொண்டேன்.

உன் கதையினூடேயும்
உன் செயலினூடேயும்
உன் நாவுக்கும்
விரல்களுக்கும் அவை தாவுகின்றன
கொஞ்சம் கொஞ்சமாய்
எனக்கும் தொற்றிவிடுமோ என்று
இப்போ நானும் அச்சம் கொள்கிறேன்.

என் அப்பா, அப்பாச்சி கூட
உன் தந்தையர் பற்களிலிருந்து
முன்னரும் புழுக்கள் நெளிந்ததைக்
கண்டு கொண்டதாகச் சொன்னார்கள்.

நூற்றாண்டுகள் கழிந்த பின்னும்
நரமாமிசம் தின்ற வாயை
தண்ணீர் விட்டுக் கொப்பளிக்க
இன்னுமா உனக்குத் தெரியவில்லை?

ஆறாத புண்ணிலிருந்து
உற்பவிக்கும் வெள்ளைப் புழுக்கள்
இனி, முல்லைப் பல் காட்டிச் சிரிக்கும்
உன் குழந்தைக்கும் தொடர வேண்டாம்.
300320102105

மார்ச் 28, 2010

துயர மலைகளைச் சுமக்கும் மடிகள்


-----துவாரகன்

உரையாடலின் நடுவில்
‘இது எனது மூத்தவனின்’ என்றபடி
அந்தப் பச்சைப் பிளாஸ்ரிக் கோவையை
என்னிடம் தந்தபோது
என் கைகள் நடுங்கின
அவனைத் தாங்குவதுபோல்
மிக மெதுவாகப் பற்றிப் பிடித்தேன்.

பள்ளியில் அவன் பெற்ற
பெறுபேறுகள் சான்றிதழ்கள் திறமைகள் எல்லாம்
அந்தக் கோவையில் இருந்து சிரித்தன
என் கைவிரல்கள் ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டிருந்தன.

அந்த பெரிய உருவத்தில் சின்னக் கண்களும்
பழைய கரியல் வைத்த சைக்கிளில்
எப்போதும் சரித்துக் கொழுவப்பட்ட
வளைபிடியிட்ட கறுப்புக் குடையும்
சின்னச் சிரிப்புடன் கதைகூறும் மென்மையும்
ஒவ்வொரு சான்றிதழ்களிலும் படமாய்த் தொங்கின.

உன் அன்னை
நீ படிக்கும் இரவுகளில்
நித்திரைத் தூக்கத்தோடு
சுவரில் சாய்ந்திருந்து காவலிருந்தாள்
உனக்குப் பிடித்தவற்றைத்
தேடித் தேடிச் சேர்த்து வைத்துக் கொண்டாள்.

தன் வாழ்நாளில் சிறுகச் சிறுகச் சேமித்து
உன்னைப் படிக்க வைத்து
உயர்வில் மகிழும் ஒவ்வொரு கணமும்
உன் தந்தைக்கு காத்திருந்த கணங்களாகியது.

முதற்பக்கத்தில் குழந்தையாய்த் தவழ்ந்த
படத்தைச் செருகி வைத்திருந்தாள் உன் தங்கை.
இறுதிப் பக்கத்தில்
அஞ்சலிப் பிரசுரத்தை
ஞாபகமாய் வைத்திருந்தான் உன் தம்பி
இந்தத் துயரமலையை
எப்படித்தான்
தாங்கிக் கொண்டாள் உன்னைப் பெற்றவள்.

‘இது என்ரை மூத்தவன்ரை தம்பி பாருங்கோ’
உன்னைப் பெற்றவன் என் கரங்களில் தந்தபோது
கண்கள் பனித்ததடா?
190320102149

(வவுனியா விவசாயக் கல்லூரி மாணவன் திருநாமம் சிந்துஜன் ஞாபகமாக)

மார்ச் 11, 2010

யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன்


-துவாரகன்-

ஒருநாள் நீ வந்தாய்
புதியதொரு பிறப்புச் சான்றிதழ் படிவத்தோடு
‘இதை நிரப்ப வேணும் சேர்’ என்றாய்
அப்போது நான் அறிந்தது உன்னை
தர்மேகன் என்று.

பிறப்புச் சான்றிதழில்
உன் பெயர் தர்மவேகன் என்றாய்
இருவரும் சிரித்துக் கொண்டோம்
பின்னர் சங்கடத்துடன் கூறினாய்
‘என்ன சேர் செய்யிறது?
மாறிப் பதிஞ்சிட்டாங்களாம்!
நீங்கள் இப்படியே எழுதுங்கோ’
அன்றிலிருந்து
எம் குரு சிஷ்ய உறவு தொடர்ந்தது

வசீகரிக்கும் கறுப்பு நிறத்தில் நீ
எந்நேரமும் துருதுருத்துக் கொண்டிருக்கும்
உன் விழிகள்.
பல்வரிசை காட்டி நீ சிரிக்கும் அழகு
கண்ணில் நின்று ஆடுதடா

கற்றலில் விளையாட்டில்
வழிகாட்டலில், வழிநடத்தலில்
கைகொடுப்பதில்
எங்கும் உன் செம்மை கண்டேன்

சேமமடு ஆசிரியர் விடுதியில்
எம்மோடிருந்து படித்து
உறங்கிய ஒரு நாள்
உனது இடது உள்ளங்கால் தோலை
எலி அரித்து விட்டுச் போனது
காலை எழுந்தவுடன்
பாயில் இருந்தபடி
உன் காலைக் காட்டியபோது
தேங்காய் அரித்த அடையாளம்…
‘நீ வெள்ளையாய் வருவாய்’ என்றோம்
மறுநாள் ‘அக்காவின் மோதிரம் சூடுகாட்டிச் சுட்டேன்’ என்றாய்

உனக்குக் கிடைக்கும் சுவையான சாப்பாடு
எங்களின் பங்குபோடலுக்குக் கொண்டு வருவாய்
மாலை முழுவதும்
நுங்குக்குலை, பழங்கள் எமக்காகும்
வயல் வெளியும் மஞ்சள் வெயிலும்
குளக்கரையும் உலாவ வைப்பாய்
பல தடவைகளில் நீதான் வழிகாட்டி
வர்ணனையாளன்… எல்லாமே

குளத்தில் குளிக்கும்போது
சின்னமீன்கள்
உடம்பில் கடிக்கும் இதம்காண வைத்துவிட்டு
நீ குத்துக் கரணம் அடிப்பாய்
உன்னோடு சேர்ந்து நாமும் சின்னவர்களாவோம்.

எந்த வேலையும் உனக்கு இலகுவாகும்
ஒரு விளையாட்டுப் போட்டி
‘சேர் வித்தியாசமாக ஏதும் செய்வோம்’
இல்லத்துக்கு ‘ஈபிள் ரவர்’ வடிவம் சொன்னேன்
கண்டவர் வாய் பிளக்க காரியம் செய்தாய்

சரஸ்வதி பூஜை, பரிசளிப்பு விழா
மாணவர் மன்றம், நாடக விழா
எல்லாம் முன்வரிசை நாயகன் நீ
வீட்டாரை உறவென்று ஆக்கினாய்
பேச்சாலும் சிரிப்பாலும் நட்பினைப் பெருக்கினாய்

பள்ளிப் பருவத்தை முழுதாய் அனுபவித்த
முதல் மாணவன் நீயடா

மூன்றரை வருடத்தின் பின்
உன் அம்மாவின் கையால்
மீண்டும் ஒரு தடவை
சாப்பிடும் அன்பு கிடைத்தபோது
என்னருகில் நீ இருந்து
‘சேர் வடிவாச் சாப்பிடுங்கோ’
அந்தச் செல்ல அதட்டல் காதில் கேட்டதடா!

இன்று
எல்லாம் இழந்து வந்த
உன் உறவுகளின் முன்னிருந்து
கதை பயிலத் தொடங்கினேன்.
உன் அத்தானும் அம்மைய்யாவும்
நீயும் இல்லாத
வெறிச்சோடிய வீட்டில்
உன் சிரிப்பினைச் சுமந்து கொண்டு
அக்காவின் பிள்ளைகள்
புன்னகைக்கக் கண்டேன்.

இப்போ உன் சிரித்த முகம் மட்டும்...
உன் அம்மாவின் காய்ந்த விழிநீரின் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
கொடுப்பில் வெற்றிலை வைத்துக் கொண்டு
நடுங்கும் குரலில் கதைக்க
உன் அப்பாவிடம் கண்டேனடா.
ஆவலாய்க் கதைகேட்கும்
உன் அக்காவின் கருவிழிகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கக் கண்டேனடா.
டிரக்டர் சீற்றில் இருந்து
அதட்டிக் கதைசொல்லும்
உன் அண்ணன்மாரிடம் கண்டேனடா
தயங்கித் தயங்கி வேலை செய்யும்
உன் தம்பியின் உருவத்தில் கண்டேனடா

ஆனால்
உன் செல்லக்குட்டி மருமகளிடத்தில் மட்டும்
ஆசை அங்கிள் வருவார் என்று
உன் அன்புக்கு ஏங்கி நிற்கும்
சிரித்த முகத்தை இன்றும் கண்டு கொண்டேன்.

என் அன்பு மாணவனே
நீ தர்ம வேகன் என்பதாலோ
வேகமாகச் சென்றுவிட்டாய்?
11.03.2010
நன்றி - பதிவுகள்
(வவுனியா சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்ற எனது மாணவன் ஐ. தர்மேகன் நினைவாக)

பிப்ரவரி 19, 2010

இரண்டு கவிதைகள்


1. என்னை நானே சொறிந்து கொள்ளல்
-----துவாரகன்

என் உடம்பை நானே சொறிந்து கொள்ளல்
மிகச் சுகமாக இருக்கிறது
மற்றவரின் முதுகு சொறிந்து கொள்ளலிலும் பார்க்க
இது மிக நல்லது
நாகரிகமானது
மற்றவரின் முதுகு சொறியும்போது
அருவருப்பாக இருக்கும்
தேமல் படர்ந்த தோல்களும்
ஊத்தை நிரம்பிய உடம்புமாக இருக்கும்

மற்றவரின் முதுகை
இவர்கள் எப்படித்தான்
முகம் சுழிக்காமல்
சொறிந்து கொள்கிறார்களோ?

யூன் 2008



2. உருமாற்றம்

குரங்கு தன் உடம்பைச்
சொறிந்து கொள்கிறது.
என்னைப் பார்த்துப் பல்லிளிக்கிறது.
நானும் என் உடம்பைச்
சொறிந்து கொள்கிறேன்.
பல்லிளித்துக் கொள்கிறேன்.
பல்லிளிப்பதாலும் சொறிந்து கொள்வதாலும்
நானும் குரங்காகிட முடியுமா?
நான் நானேதான்.

யூன் 2008

ஜனவரி 16, 2010

* யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டை

-----துவாரகன் ஒரு நாள் என் வீடு இருந்தது. வயல்வெளிக்கு நடுவே ஆலமர விருட்சம் போல் அரைக்காற்சட்டையோடு அண்ணா டிரக்டர் எடுத்து வயல் உழச்செல்வான் அப்பா விதைநெல் விசிற சின்னமாமாவைக் கூட்டிப் போவார் மாலை பட்டி திரும்பும் மாடுகளை அடைக்கவும் குளத்தில் வரால் மீன் பிடிக்கவும் சின்னத்தம்பி என்னுடன் வருவான். தங்கையும் நானும் கதை பயில தேக்கமரமும் மலைவேம்பும் எம்மை ஊஞ்சலில் தாங்கிய நாட்கள். மாலையானதும் மாடுகள் அசைபோடுவது போல் உறவுகள் சுற்றியிருந்து அன்பை அசைபோடுவோம். அம்மாவும் பெரியக்காவும் சுவையாகச் செய்த சாப்பாடு. செய்திக்குப் பின் அப்பா என்னிடம் தரும் றேடியாவில் வழிந்து வரும் பாட்டு. காதில் கேட்கும் எருமைகளின் மேய்ச்சல்த்தூரம் எல்லாவற்றோடும் நானும் தூங்கிப் போவேன். இப்போ இரண்டு காவலரனுக்கு நடுவில் மழை வெள்ளம் தரைதட்ட தொண்டு நிறுவனம் தந்த படங்கு காற்றில் அடிக்க எங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட புது நிலத்தில் அம்மாவின் காய்ந்த விழிகளோடு நானும் காத்திருக்கிறேன். யாரோ போட்டு முடித்து முகாமொன்றில் தானமாகக் கிடைத்த ஒரு இரவுச் சட்டை என்னை மூடிக்கிடக்கிறது. 241220091122
 * (தலைப்பு அ. முத்துலிங்கத்தின் கதையிலிருந்து எடுக்கப்பட்டது.)