செப்டம்பர் 18, 2009

கண்களைப் பற்றி எழுதுதல்


-----துவாரகன்

இந்தக் கண்களுக்கு
எப்போதும் கனவுகள் பலவுண்டு
சிலை செதுக்கும் சிற்பியும்
இறுதியில் திறப்பதும் கண்களைத்தான்

கடவுளும் கண்களைத் திறந்தால்
கருணை பொழிவார் என்கிறார்கள்
நாங்கள் எப்போதும் ஒருவர் கண்களை
மற்றவர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

சிரிக்கும் கண்கள்
எரிக்கும் கண்கள்
கருணைக் கண்கள்
கயமைக் கண்கள்
கண்காணிக்கும் கண்கள்
கண்டுகொள்ளும் கண்கள்
எல்லாம் கண்கள்தான்
பார்வையில்தான் அப்படி என்ன வித்தியாசம்?
வானில் மிதக்கும் வெண்ணிலாபோல்
இந்த உலகெங்கும் மிதந்து கொண்டிருக்கின்றன
எல்லாக்கண்களும்… எல்லார்மேலும்!
கண்கள் இல்லாது போனால்?
தடவித் தடவி தடுக்கி விழவேண்டியதுதான்.

போகும் இடங்களில் மிகக் கவனமாக
மற்றவர் கண்களைப் பார்த்துக் கொள்ளவேண்டும்
சந்திகளில் வீதிகளிலும்கூட…
கண்களில் அக்கறை கொள்ளவேண்டும்.
கண்களை மட்டுமா?
கைகளை… சைகைகளை...
சிந்தனையை வீட்டில் கழற்றி வைத்துவிடவேண்டும்

தந்திரமும் தப்புதலும் மிக முக்கியம்
இல்லாவிட்டால்
போகிற போக்கில் கண்களைப் பிடுங்கி விட்டு
வீதியில் விட்டு விடுவார்கள்
வெள்ளைப் பிரம்புகூடத் தரமாட்டார்கள்
யார் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
இலாப நட்டத்தை யார் பார்க்கிறார்கள்
அவரவர்… அவரவர் பாடு

சும்மா போ
கண்களாவது பிரம்பாவது!
260820071033

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக