செப்டம்பர் 19, 2009

செட்டிக்குளமும் ஒரு பிரெஞ்சு மருத்துவனும்



-----துவாரகன்

வெடித்து விழுந்த மின்னல் வெட்டுக்களிடையே
சிதறித் தெறித்தன உயிர்க்கொடிகள்
முகத்தை விட்டுத்
துள்ளி விழுந்தன கண்கள்
மரங்களின் பொந்துகளிடை
பதுங்கிக் கொண்டன காதுகள்
கைவிரல்கள் மாமரங்களில் தொங்கிக் கொண்டன
கால்கள் தென்னை மரங்களில் தெறித்து வீழ்ந்தன
பிரிந்த குடலிலிருந்து
ஊறிய அரிசியும் பருப்பும்
சிவப்பாய்ச் சிதறின
துடித்துக் கொண்டிருந்த
இதயத்தை
நாயொன்று காவிச்சென்றது
முழுதாய்க் கிடந்த கண்முழிகளை
கோழிகள் கொத்திச் சென்றன
சிதறித் தூவிய தசைப்பிண்டங்களை
எறும்புகள் இழுத்துச் சென்றன.
உயிர்ப்பிச்சைக்கான அவலத்தினிடை
தன் முன்னே பரப்பியிருந்த
இரத்தம் நிரம்பிய உடல்களிலிருந்து
முழுதாக ஒரு மனிதனை
மீண்டும் உருவாக்க
செட்டிக்குளத்தில்…
பிரெஞ்சு மருத்துவனொருவன்
முயன்று முயன்று
தோற்றுக் கொண்டிருக்கிறான்
100520090835

4 கருத்துகள்:

  1. நான் இதனை யுகமாயினியில் வந்தபோதே வாசித்தேன். எனக்குப் பிடித்த கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே, யுகமாயினியில் இக்கவிதையை நன்றாக வடிவமைத்திருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையும் நன்று. வடிவமைப்பும் நன்று. அதே இதழில் எனது சிறுகதையும் பிரசுரமானது. வாசித்தீகளா?

    பதிலளிநீக்கு
  4. நன்றி நிர்மலன், நானும் யுகமாயினி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு